பதிவு செய்த நாள்
27
செப்
2016
12:09
மதுரை: கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். ஆனால், ஒரு ஊரே கோயிலாக இருந்தால் அங்கு குடியிருப்பவர்கள் எத்தனை பாக்கியம் பெற்றவர்கள். அதனால் தான் என்னவோ நம் மதுரையை ‘கோயில் நகரம்’ என்கிறார்கள். இத்தனை ஆன்மிக பெருமையுள்ள நம் ஊரில் பல வரலாற்று சான்றுகளை சுமந்து நிற்கும் குடைவறை கோயில்களும் இருக்கின்றன என்பதை நம்மில் பலர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
குடைவறை கோயில் மலைகளை குடைந்து பாறைகளில் கடவுள் உருவங்களை செதுக்கி உருவாக்கப்படும் கோயில்கள் தான் குடைவறை கோயில் என்று அழைக்கப்படுகிறது. பல நாடுகளுக்கு பயணிக்கும் சமண, பவுத்த முனிவர்கள் தங்கி, வழிபட்டு செல்லவே மன்னர்கள் குடைவறைகளை ஏற்படுத்தினர். உலகில் முதன், முதலாக ரமாசின் என்ற எகிப்து மன்னன்
குடைவறை கோயில்களை நிர்மாணித்தார். இந்தியாவில் முதன் முதலாக அசோக மன்னர் தான் குடைவறை கோயில்களை உருவாக்கினார்.
சிதையும் வரலாற்று சின்னங்கள்: மதுரையின் பெருமைகளில் இந்த குடைவறை கோயில்களுக்கு பெரிய பங்கு உண்டு. ஆனால், வரலாற்று நிகழ்வுகளின் சான்றுகளாக விளங்கும் இது போன்ற கோயில்களின் பாதுகாப்பு இன்று கேள்விக் குறியாகி உள்ளது. புடைப்பு சிற்பங்களாக (எம்போஸ்டு பிக்சர்) செதுக்கப்பட்ட சுவாமி சிலைகள் எல்லாம் உடைந்தும், சிதைந்தும் வருகிறது. இதன் அருமை, பெருமை தெரியாதவர்கள் கோயில் வளாகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது வேதனைக்குரிய விஷயம். தொல்லியல் துறை சில குடைவறை கோயில்களுக்கு மட்டும் கம்பி கதவுகள் அமைத்துள்ளனர். இதே போல் சமண சின்னங்களையும் முறையாக பாதுகாக்க வேண்டும். இது போன்ற பொக்கிஷங்களை அழியவிடாமல் தடுத்தால் எதிர்கால இளம் தலைமுறையினர் நம் மதுரையின் பாரம்பரிய, பண்பாட்டு, வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்வர்.
ஒத்தக்கடை லாடன் கோயில்: ஒத்தக்கடை யானை மலையில் நரசிங்க பெருமாள் குடைவறை கோயிலை, ஜடில பராந்தக நெடுஞ்சடையன் என்ற மன்னரின் மந்திரி மதுரகவி கட்டினார். இதன் அருகே அந்தணர் ஒருவர் லாடன் கோயில் என்ற குடைவறை முருகன் கோயிலை உருவாக்கினார். குஜராத் மாநிலத்தின் லாட தேசத்து சன்னியாசிகள் இக்குடைவறை கோயிலில் தங்கி, ராமேஸ்வரம் சென்றதால் இக்கோயில் ‘லாடன் கோயில்’ என்று பெயர் பெற்றது. தமிழ்நாட்டில் சிவன், பார்வதி சேர்ந்து அமர்ந்திருப்பது போன்ற கோயில்கள் தான் அதிகம் உள்ளன. லாடன் கோயிலில் முருகன், தெய்வானை அமர்ந்திருப்பதை போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பு.
வரிச்சியூர் உதயகிரீஸ்வரர் கோயில்: உதயகிரீஸ்வரர் சிவன் கோயில் மதுரை – சிவகங்கை ரோட்டில் வரிச்சியூர் அருகேயுள்ள மலை குன்று ஒன்றில் பாண்டிய மன்னர்களின் ஒருவரால் கட்டப்பட்டது. நாட்டிற்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க வேண்டும் என்று இக்கோயிலை கிழக்கு நோக்கி அமைத்தனர். அதனால், ஆட்சி செய்ய ஆரம்பிக்கும் பருவத்தில் உள்ள இளவரசர்கள் இக்கோயிலில் வழிபடுவது வழக்கம். இதே பகுதியில் மேற்கு நோக்கிய அஸ்தகிரீஸ்வரர் கோயில் ஒன்றும் உள்ளது. ஆட்சி காலமும் முடியும் நிலையில் அதாவது அஸ்தமனம் ஆகும் நிலையில் உள்ள வயதான அரசர்கள் வழிபட இக்கோயில் குடையப்பட்டது.
அரிட்டாபட்டி சிவன் கோயில்: இங்கு உள்ள சிவன் பெரிய உருவத்தில் மிகப் பிரம்மாண்டமாக காட்சிஅளிக்கிறார். நுழைவு வாயிலில் இருபுறங்களிலும் துவார பாலகர்கள் சிலை வடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் வெளியே
வலதுபுறம் விநாயகர் சிலை உள்ளது. இடதுபுறம், குஜாரத்தில் வாழ்ந்து, இந்தியாவில் சைவத்தை நிலைநாட்டிய லகுலீசர் என்ற மகானின் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இவர் இந்தியாவில் ஆயிரத்திற்கும் அதிகமான சிவன் கோயிலை உருவாக்கினார்.
தென்பரங்குன்றம் அர்த்தநாரீஸ்வரர் கோயில்: ஜடில பராந்தக மன்னரின் இரண்டாவது மந்திரி சாத்தன் கணபதியின் மனைவி தான் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலை குடைவறை கோயிலாக உருவாக்கினார். இதே குன்றத்து மலையில் அர்த்தநாரீஸ்வரர் சிலையுடன் கூடி தென்பரங்குன்றம் கோயில் உள்ளது. இக்கோயிலை யார் குடைந்தது என்ற வரலாற்று பதிவுகள் இல்லை. ஆனால், சமண கோயிலாக இருந்த இக்குடைவறையை 10ம் நுாற்றாண்டில்
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் சைவ கோயிலாக மாற்றினார்.
மலைகளில் சமண சின்னங்கள்: மதுரையில் கீழக்குயில்குடி, யானைமலை, கொங்கர் புளியங்குளம், பெருமாள் மலை, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் சமண சின்னங்கள் அதிகம் உள்ளன. இச்சின்னங்கள் அனைத்தும் நம் மதுரைக்கு சமணர்கள் வந்து போன வரலாற்று சான்றுகளை சுமந்து கொண்டிருக்கிறது. தமிழக அளவில் மதுரையில் தான் அதிக பிராமி கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. திருப்பரங்குன்றத்தில் கிடைத்த பிராமி கல்வெட்டுக்கள் பல அரிய தகவல்களை தருகிறது.