பதிவு செய்த நாள்
28
செப்
2016
11:09
விழுப்புரம்: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் புரட்டாசி அமாவாசை உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ராஜசேகரன், உதவி கலெக்டர் (பயிற்சி) சரயு, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வாசுதேவன் உட்பட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், பி.டி.ஓ.,க்கள், போக்குவரத்து மற்றும் தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர். கூட்டத்தில் கலெக்டர் சுப்ரமணியன் பேசியதாவது: கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செஞ்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் குடிநீர் மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்து தர வேண்டும். போக்குவரத்துத்துறை மூலம் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். முழு சுகாதார திட்டம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கழிவறை, குளியலறை அமைத்து தர வேண்டும்.
மின்வாரியம் மூலம் திருவிழா நாட்களில் தேவையான மின் பணியாளர்கள் பணியில் இருக்கவும், அவ்வப்போது ஏற்படும் மின்தடைகளை சரி செய்து, விழாக்காலங்களில் மும்முனை இணைப்பு மூலம் மின்சாரம் வழங்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவில் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, சி.சி.டி.வி., மூலம் கண்காணிக்க வேண்டும். பக்தர்கள் அதிகம் கூடுமிடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தவும், ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியை அனைத்து பக்தர்களும் பார்க்க வசதியாக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன வீடியோ வாகனம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டது. மேலும், சுகாதாரத்துறை மூலம் மருத்துவக்குழு மற்றும் ஆம்புலன்ஸ்கள் கோவில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் சுப்ரமணியன் பேசினார்.