பதிவு செய்த நாள்
28
செப்
2016
11:09
நாமக்கல்: நவராத்திரி பண்டிகை துவங்க, இன்னும், மூன்று நாட்களே உள்ள நிலையில், கொலுபொம்மை விற்பனை அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் நவராத்திரியின், ஒன்பது நாட்களும், முப்பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல், மூன்று நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த, மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி, மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது. நவராத்திரியன்று, வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். இந்தாண்டு, நவராத்திரி விழா துவங்க, மூன்று நாட்களே உள்ள நிலையில், நாமக்கல்லில் கொலு பொம்மைகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து, கொலு பொம்மை விற்பனையாளர் ருக்மணி கூறியதாவது: நவராத்திரி விழாவின், ஒன்பது நாட்களிலும் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும். கொலு வைத்து அம்மனை வழிபடும் பெண்கள், அக்கம் பக்கத்தவர்களையும் உறவினர்களையும் அழைத்து அம்மனுக்கு படைத்த பிரசாதங்களை வழங்குவர். நவராத்திரி துவங்கவுள்ளதை முன்னிட்டு, கொலுபொம்மை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. மண்ணால் ஆன, ராகவேந்திரர், அம்மன், ராமானுஜர், சரஸ்வதி, நரசிம்மர், ராதை உள்ளிட்ட பல்வேறு கொலு பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன. கிருஷ்ணரின் விஸ்வரூப பொம்மை மற்றும் ஒரே சிலையில் கிருஷ்ணர் ராதை இணைந்த நிலையில் உள்ள, சம்மோகன கிருஷ்ணர் பொம்மையை, மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். கிருஷ்ணரின் விஸ்வரூப பொம்மை, 6,000 ரூபாய்க்கும், சம்மோகன கிருஷ்ணர், 4,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.