பதிவு செய்த நாள்
29
செப்
2016
11:09
திருப்பூர் : புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாத அமாவாசையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, வழிபாடுமாறு, ராஜகோபாலன் அறிவுறுத்தினார். திருப்பூரில், முக்தி மார்க்கம் டிரஸ்ட் விழாவில், "மஹாளயபக்ஷ மகிமை குறித்து, ஸ்ரீமத் அஹோபில மடத்தின் வித்வான் ஏ.எம்.ராஜகோபாலன் சுவாமி, "வைதீகஸ்ரீ ஆசிரியர் ராஜகோபால கனபாடிகள் ஆகியோர், பக்தர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில் விவரம்: சிதிலமடைந்த கோவில்களை புதுப்பித்து பூஜை செய்வது, ஒருவர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஊருக்கே நன்மை பயக்கும். சிதிலமடைந்த கோவில்களை கண்டால், சுத்தப்படுத்தி, விளக்கேற்றுவது புண்ணியம். கோவிலைவிட உயரமாக, வீடு கட்டக்கூடாது. குழந்தைகள், அம்மாவிடம் இருந்து தான், தந்தை உட்பட அனைவரையும் தெரிந்து கொள்கிறது. தாய்க்கே முதல் ஸ்தானம் கொடுக்க வேண்டும். திருப்பதி பத்மாவதி தாயாரை தரிசித்த பிறகு, பெருமாளை சேவித்தால் மட்டுமே, முழு பலன் கிடைக்கும்.
கோவில்களில் விளக்கேற்றி வழிபட, புதிய அகல் விளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பாவங்களுக்கு பரிகாரம் கிடைக்கும். மகரிஷிகள் தனியாக பிறப்பதில்லை; மனிதனாக பிறந்தவரே, மகரிஷியாக மாறுகிறார். மனதை கட்டுப்படுத்தி, ஐம்புலனையும் அடக்கினால், தவம், தியானம் எளிதாகும். மாத அமாவாசையில், மாதா, பிதா என, தங்களது முன்னோருக்கு மட்டும் தர்ப்பணம் கொடுக்கலாம். மகாளபக்ஷய அமாவாசையில், முன்னோர்கள், அனைத்துவகை உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்களுக்கும் தர்ப்பணம் செய்யலாம். பிதுர் தோஷம் இருந்தால், கல்யாணம் நடக்காது; வம்ச விருத்தியாவதில் தாமதம் ஏற்படும். பித்ருக்களுக்கு பிண்ட தர்ப்பணம் செய்தால், தோஷம் நீங்கி, திருமணம், வம்ச விருத்தி கைகூடும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.