பதிவு செய்த நாள்
30
செப்
2016
10:09
நாகர்கோவில்: அக்., 2 தேதி தொடங்க உள்ள நவராத்திரி பூஜைக்காக, குமரி மாவட்டம், பத்மனாபபுரத்தில் இருந்து கேரளாவுக்கு சரஸ்வதி தேவி மற்றும் சுவாமி விக்ரகங்கள் யானை மீது ஊர்வலமாக புறப்பட்டு சென்றன. இதில், கேரள அமைச்சர்கள் பங்கேற்றனர்.
மன்னர் ஆட்சி காலத்தில், திருவிதாங்கூர் ராஜ்யத்தின் தலைநகராக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மனாபபுரம் விளங்கியது. இங்குள்ள அரண்மனை வளாகத்தில் தேவாரகெட்டு சரஸ்வதி கோயில் உள்ளது. 1840ம் ஆண்டு சுவாதி திருநாள் மன்னர் காலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னரும் நவராத்திரி விழா தடையின்றி நடப்பதற்காக மன்னர் உத்தரவு படி சரஸ்வதிதேவி சிலை யானை மீது பவனியாக திருவனந்தபுரம் எடுத்து செல்லப்பட்டது. மன்னர் ஆட்சி மறைந்த பின்னரும், அந்த மரபு மறக்கப்படாமல் தொடர்கிறது.
அக்., 2ம் தேதி நவராத்திரி பூஜை தொடங்குவதை ஒட்டி, நேற்று காலை, 8:00 மணிக்கு பத்னாப புரத்தில் இருந்து நவராத்திரி பவனி புறப்பட்டது. யானை மீது சரஸ்வதி தேவியும், பல்லக்குகளில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் எடுத்து செல்லப்பட்டன. யானை மீது சரஸ்வதி தேவி சிலை ஏற்றப்பட்ட போது கேரள போலீசாரின் பேண்டு வாத்தியம் முழங்க, போலீசார் துப்பாக்கியை வானை நோக்கி பிடித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக காலை, 7:40 மணிக்கு மன்னரின் உடைவாள் எடுத்து கொடுக்கும் நிகழ்ச்சி அரண்மனை உப்பிரிகை மாளிகை யில் நடைபெற்றது. கேரள தொல்பொருள் துறை அமைச்சர் ராமச்சந்திரன், தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர் வாளை எடுத்து குமரி மாவட்ட தேவசம்போர்டு இணை ஆணையர் பாரதியிடம் கொடுத்தார். இந்த வாள் ஊர்வலத்தின் முன் எடுத்து செல்லப்பட்டது.