பதிவு செய்த நாள்
01
அக்
2016
11:10
திருப்பரங்குன்றம்: நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க, சுப்பிரமணிய சுவாமி தனது கரத்திலுள்ள வேல்மூலம் மலைமீதுள்ள பாறையில் கீறி, கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை சுனையில் உருவாக்கியதை நினைவு கூறும் வகையிலும், மழை வேண்டியும் கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள வேல் மலைமேல் கொண்டு செல்லும் விழா நடந்தது.
செப்.,30 காலை மூலவர் கரத்திலுள்ள வேல், சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. சிறப்பு பொது பூஜை முடிந்து கிராமத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டு, பல்லக்கில் வீதி உலா சென்று மலைமேல் கொண்டு செல்லப்பட்டு, சுப்பிரமணியர் கரத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அங்கு காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பஞ்சலிங்கம், நந்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவருக்கு பூஜைகள் முடிந்து, கோயில் சிவாச்சாரியார்கள் வேலை, சுனை தீர்த்தத்தில் எடுத்துச் சென்று அபிகேஷம் செய்தனர்.
கிராமத்தினர் சார்பில் 150 படி அரிசியினாலான கதம்ப சாத பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் வேல் புறப்பாடாகி, மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழனி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, இரவு வேல், சுவாமிக்கு அபிஷேகங்கள், தீபாராதனைகளுக்குப்பின்பு பூப்பல்லக்கில் வேல் வீதி உலா முடிந்து மூலவர் கரத்தில் மீண்டும் சேர்ப்பிக்கப்பட்டது.