புதுச்சேரி: அகோபில மட அதிபர் ஸ்ரீமத் அழகிய சிங்கர், புதுச்சேரியில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
புதுச்சேரி ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலுக்கு, ஸ்ரீஅகோபில மடம் 46வது அதிபதி ஸ்ரீமத் அழகிய சிங்கர் செப்.,30 மாலை 4:00 மணிக்கு வருகை புரிந்தார். அவருக்கு, பூரணகும்ப மரியாதை மற்றும் ஸ்ரீசடாரி மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் தர்மாதி பீடத்தில் மங்களா சாசனம், 5:00 மணிக்கு அகோபில மடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாலோலன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதையடுத்து, பக்தர்களுக்கு அழகிய சிங்கர் அருளாசி வழங்கினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமி நாராயணன், வையாபுரி மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, லட்சுமி ஹயக்ரீவர் பக்த ஜனசபா மற்றும் ஸ்ரீலட்சுமி சரஸ் மாருதி டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.