பதிவு செய்த நாள்
07
அக்
2016
11:10
வாழப்பாடி: பேளூரில், கி.பி., 959ம் ஆண்டை சேர்ந்த, சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட வரலாற்று தேடல் குழுவை சேர்ந்த, தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், கலைச்செல்வன், சீனிவாசன், டாக்டர் பொன்னம்பலநாதன், ஆர்வலர்கள் ஜீவநாராயணன், வீரமணி, வீராசாமி ஆகியோர் அடங்கிய குழு, சேலம் மாவட்டம், பேளூர் பகுதியில் வரலாற்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்குள்ள அங்காளம்மன் கோவிலில், கல்வெட்டு ஒன்று வழிபாட்டில் இருந்து வந்ததை கண்டறிந்தனர். அதை ஆய்வு செய்தபோது, அது உடைந்துபோன கல்வெட்டின் மேற்பகுதி என தெரிந்தது. அந்த கல்வெட்டின் அடிப்பகுதியை காணவில்லை. இந்த துண்டு கல்வெட்டில், எட்டு வரிகள் உள்ளன. அதில், கடைசி மூன்று வரிகள், சிதைந்த நிலையில் உள்ளன.
இதுகுறித்து, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது: ஸ்வஸ்திஸ்ரீ மதிரையும், ஈழமும் கொண்ட கோப்பரகேசரிவர்மன் என, கல்வெட்டு துவங்குகிறது. அந்த அடைமொழி, முதலாம் பராந்தக சோழனுக்கு உரியது. பராந்தக சோழனின், 41வது ஆட்சி காலத்தில், கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. பத்தாம் நூற்றாண்டில் பேளூர் பகுதி, சோழர்களின் ஆட்சியில் இருந்ததை, கல்வெட்டு உறுதி செய்கிறது. நரசிங்கபுரத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு, விளக்கு எரிப்பதற்கு, தானம் கொடுத்ததை கல்வெட்டு குறிப்பிடுகிறது. கல்வெட்டின் கீழ்பகுதி கிடைக்காததால், தானமாக கொடுத்தது யார்? கொடுத்தது நிலமா, நகையா என்ற விவரம் தெரியவில்லை. சேலம் மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில், நிலத்துக்கு உரியது பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில். இந்த கோவிலில், ஐந்து கல்வெட்டுகள் உள்ளன. முதலாம் பராந்தக சோழனுக்கு பின் வந்த சோழ மன்னரின், கி.பி., 959ம் ஆண்டு கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. பேளூரில், முழுமையாக ஆய்வு செய்தால், இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.