பதிவு செய்த நாள்
07
அக்
2016
11:10
குன்னுார் : குன்னுார் பகுதிகளில் உள்ள கோவில்களில், நவராத்திரி விழாவையொட்டி, கொலு வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குன்னுார் மவுன்ட் ரோடு பகுதியில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி திருவிழாவை ஒட்டி நடந்த துர்காயாக பூஜையில், காஞ்சி காமாட்சியம்மன் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து, நடந்த லட்சுமி பூஜையில், தாய்மூகாம்பிகை, ஆதிபராசக்தி, காசி விசாலாட்சியம்மன், மதுரை மீனாட்சி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி, அன்னலட்சுமி, திருப்பதி அலமேலு மங்கை அலங்காரங்களில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொலு வைக்கப்பட்டிருந்தது. இதில், சந்தான லட்சுமி அலங்காரத்தில் தாய், குழந்தையின் அலங்காரம் பக்தர்களை பரவசப்படுத்தியது. மகாலட்சுமியாகம் நடந்தது. நேற்று திருச்சனுார் அலமேலு நாச்சியார் அலங்காரம், இன்று முதல், 9ம் தேதி வரை நாட்கள் சரஸ்வதி அலங்கார கொலு இடம் பெறுகிறது. இதில், வித்யா சரஸ்வதி, ராஜா மாதங்கி, மகா முப்பெரும் தேவியர், மகிஷா சுர மர்த்தினி அலங்காரங்களில் அம்மன் அருள்பாலிக்க உள்ளார். 11ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை அர்ச்சகர் குணா சாஸ்திரி மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இதேபோல, குன்னுார் தந்திமாரியம்மன் கோவிலில் நாள்தோறும் நவராத்திரி சிறப்பு வழிபாடுகள், அர்ச்சனை ஆராதனை பிரசாத வினியோகம் நடந்து வருகிறது. துருவம்மன் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில் உட்பட பல்வேறு கோவில்களிலும் நவராத்திரி விழா சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
* அருவங்காடு சித்தி விநாயகர் கோவிலில் நவராத்திரி அம்மன் கொலு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அர்ச்சனை, ஆராதனை, பஜனை, மகா தீபாராதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்து வருகிறது.