பதிவு செய்த நாள்
12
அக்
2016
10:10
தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் தனுசு ராசி அன்பர்களே!
புதன் நவ.4 வரையிலும், சுக்கிரன் நவ. 8க்குப் பிறகும் நன்மை கொடுப்பார்கள். சூரியன், கேது மாதம் முழுவதும் நற்பலனை வாரி வழங்குவர். கடவுளின் கருணைக்கு பாத்திரமாகத் திகழ்வீர்கள். புதிய முயற்சி அனைத்திலும் வெற்றி உண்டாகும். பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது. சூரியனால் சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். நவ.3 க்கு பிறகு எதையும் முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. குடும்பத்தில் நன்மை மேலோங்கும். பெண்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். அக்.30,31ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் நவ.11,12 ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். நவ.4,5ல் சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நவ.9,10ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு. பயணத்தின் போது சற்று கவனம் தேவை. நவ.8க்கு பிறகு உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியதிருக்கும்.
தொழில், வியாபாரத்தில் தடை குறுக்கிட்டாலும் அக்.18 க்கு பிறகு நிலைமை சீராகும். லாபம் படிப்படியாக அதிகரிக்கும். அக்.25க்கு பிறகு அரசு வகையில் பிரச்னை சந்திக்க நேரிடலாம். எனவே வரவு-,செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். நவ.1,2,3,6,7,8ல் சந்திரனால் தடை உருவாகலாம். அக்.19,20, நவ.15ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். நவ.3க்கு பிறகு போட்டியாளர்களால் தொல்லை ஏற்படலாம். முயற்சியில் தடைகள் குறுக்கிடலாம்.
பணியாளர்கள் சீரான முன்னேற்றம் காணலாம். விண்ணப்பித்த கடனுதவி விரைவில் கிடைக்கும். சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க தடையேதும் இல்லை. அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். அக்.27,28,29ல் முன்னேற்றமான பலனை எதிர்பார்க்கலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
கலைஞர்களுக்கு மந்தநிலை குறுக்கிட்டாலும் நவ.8க்கு பிறகு நிலைமை சீராகும். அதன் பிறகு சக பெண் கலைஞர்கள் உதவிகரமாக செயல்படுவர். புகழ் பாராட்டு எதிர்பார்த்த அளவில் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தொண்டர்களின் ஆதரவு மனதிற்கு நிம்மதியளிக்கும். அரசியல் ரீதியான பயணம் அடிக்கடி செல்ல நேரிடும். அக்.17,18, நவ. 13,14ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் தொடர்ந்து முன்னேற்ற நிலையில் காணப்படுவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவர். நவ.3க்கு பிறகு படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும். பெற்றோர் ஆலோசனையை ஏற்பது நன்மை தரும்.
விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானம் பெறுவர். நெல், சோளம், கேழ்வரகு, கொள்ளு போன்ற பயிர்களில் நல்ல மகசூலும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் மாத தொடக்கத்தில் அதை நிறைவேற்றி கொள்வது நல்லது. வழக்கு விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் வளர்ச்சிப்பாதையில் வெற்றி நடை போடுவர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். உங்களால் குடும்பம் சிறப்படையும். கணவர் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் உங்களின் மதிப்பு உயரும். வேலைக்கு செல்லும் பெண்கள் முன்னேற்றமான பலனைப் பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். அக்.21,22ல் சிறப்பான நன்மையை எதிர்நோக்கலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
நல்ல நாள்: உங்கள் ராசிக்கு அக். 19,20,21,22, 27,28,29,30,31, நவ. 4,5,9,10,15 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செய்தல் ஆகியவற்றைச் செய்யலாம்.
கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8ம் இடமான கடக ராசியில் சந்திரன் அக்.23,24ல் இருப்பார். இந்த காலத்தில் வீண் விவாதங்களைத் தவிர்த்து இறைவழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம்.
அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: பச்சை, சிவப்பு
பரிகாரம்: முருகன் கோவிலுக்கு தவறாமல் செல்லுங்கள். ஏழை மாணவர்களின் கல்விச் செலவுக்கு உதவி செய்யுங்கள். தினமும் மாலையில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள். பிரதோஷத்தன்று நந்தீஸ்வரரை வழிபட்டால் நன்மை பெருகும். விஷ்ணு, காயத்ரி தேவியை வணங்குங்கள்.