பதிவு செய்த நாள்
21
அக்
2016
10:10
சென்னை: ஒரு கால பூஜை வைப்பு நிதி திட்டத்தை, நடப்பாண்டில், 241 கோவில்களுக்கு விரிவுப்படுத்த, அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார். அறநிலையத் துறை கமிஷனர் அலுவலக கூட்ட அரங்கில், துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள, கோவில் திருப்பணிக்கான நிதியுதவியை, 50 ஆயிரம் ரூபாயில் இருந்து, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான செலவை, நிதி வசதி மிகுந்த கோவில்களின் உபரி நிதியில் இருந்து மேற்கொள்ள வேண்டும். ஒரு கால பூஜை வைப்பு நிதி திட்டத்தில், தற்போது, 12 ஆயிரத்து, 504 கோவில்கள் பயனடைந்து வருகின்றன. இந்த ஆண்டு மேலும், 241 கோவில்களுக்கு, திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். பக்தர்கள் வசதிக்காக, அனைத்து கோவில்களிலும், நவீன கழிப்பறை, குளியல் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.கூட்டத்தில், துறையின் செயலர் ராமச்சந்திரன், கமிஷனர் வீரசண்முகமணி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.