மலைக்கோயில் கழிவுகளை பயன்படுத்தி பயோகாஸ் தயாரிக்க திட்டம் ரெடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2016 11:10
பழநி: பழநி மலைக்கோயிலில் குவியும் குப்பை மற்றும் அன்னதான உணவுக் கழிவுகளை பயன்படுத்தி பயோ காஸ் தயாரிக்க திட்டமிடப்பட்டு, மாசுகட்டுப்பாட்டு துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஸ்ரீரங்கம், பழநிமலைக்கோயிலில் மட்டும் தான் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. இதன்படி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பழநி மலைகோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வாழை இலையில் சாதம், இரண்டு வகை காய்கறிகள், அப்பளம், பாயசத்துடன் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. விழாநாட்களில் 8 ஆயிரம் பக்தர்களும், சாதாரண நாட்களில் 5 ஆயிரம் பக்தர்களும் உணவு அருந்துகின்றனர். இங்கு சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகள், எச்சில் இலைகள் உள்ளிட்ட உணவு குப்பை மற்றும் பக்தர்கள் போடும் குப்பை மொத்தமாக சேகரிக்கப்பட்டு நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. பழநி மலைக்கோயில் கழிவுநீரை சேகரித்து சுற்றுலா பேருந்து நிலையம் அருகே ஏற்கனவே ரூ.20 லட்சம் செலவில் காஸ் தயாரிப்பதற்காக தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் அடுத்த கட்டமாக ரூ.40 லட்சம் செலவில் மலையின்மீது அன்னதான உணவுகழிவுகள் மூலம் பயோ காஸ் தயாரிக்க புதிதாக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு, சுற்றுச்சூழல்துறை அனுமதி கிடைத்தவுடன் விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.