பதிவு செய்த நாள்
21
அக்
2016
11:10
நாகமலை: புதுக்கோட்டை மதுரை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கலை வரலாறு உடையது, என பாண்டிய நாடு வரலாற்று ஆய்வு மைய செயலாளர் சாந்தலிங்கம் பேசினார். மதுரை காமராஜ் பல்கலை கலை வரலாற்றுத்துறை சார்பில் ஆர்ட் இன் மதுரை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இளைஞர் நலத்துறை புலத்தலைவர் வேளாங்கண்ணி ஜோசப் வரவேற்றார்.
சாந்தலிங்கம் பேசியதாவது: மதுரை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கலை வரலாறு உடையது. புறநானுாறு மதுரையை கலை நகரம் என்று குறிப்பிடுகிறது. படிப்பறிவு இல்லாத காலங்களில் சிற்பங்கள், ஓவியங்கள் மூலம் தமது எண்ணங்களை மக்களோடு பகிர்ந்து கொண்டனர்.கீழவளவு, அரிட்டாபட்டி, சமணர் மலை, கொங்கர் புளியங்குளம் சமணர் படுகைகள், மகாவீரர் உட்பட பல்வேறு சிற்பங்கள், தமிழ் பிராமி கல்வெட்டுக்கள், தமிழ் வட்டெழுத்துக்கள் ஆகியவை மதுரையின் கலை வரலாற்றை தெரிவிக்கின்றன.
சங்க காலத்தில் மதுரை, பூம்புகாரில் ஏராளமான கோயில்கள் இருந்ததாக மதுரை காஞ்சி கூறுகிறது. செங்கல் கட்டுமான கோயில்களான அவை காலத்தால் அழிந்து விட்டன. 8ம் நுாற்றாண்டில் காலத்தால் அழியாத குடவரை கோயில்கள் தோன்றின. அவற்றில் இடவசதி போதுமானதாக இல்லை. களப்பிரர்கள் காலத்திற்கு பின்பு பல்லவர், பாண்டியர்கள் காலத்தில் கற்களால் கோயில் கட்ட முடியும் என்று அறிந்தனர். அதன் பிறகே தமிழகத்திற்கு நிரந்தர கலை வடிவம் கிடைத்தது. தென் தமிழகத்தில் நடு கற்களையே வழிபட்டு வந்தனர். அவற்றுக்கு ஆடுகளை பலி கொடுத்தனர். உருவ வழிபாடு இல்லை. மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் 9ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. அதன் வெளி பிரகாரங்கள் பின்னர் கட்டப்பட்டவை. மன்னர் திருமலை நாயக்கர் மகால் இந்து, இஸ்லாம், ஜெர்மன் கூட்டு கலை வடிவத்தில் உள்ளது. இவ்வாறு பேசினார். ஒருங்கிணைப்பாளர் பாபு நன்றி கூறினார்.