பதிவு செய்த நாள்
21
அக்
2016
12:10
சென்னை;கடல் கடந்தும், கங்கை வரையும் சென்று வெற்றி கண்ட ஒரே தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் மட்டும் தான், என, தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர், ஆர்.நாகசாமி பேசினார். ராஜேந்திர சோழனின், 1,000வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை பல்கலையின் தொல்லியல் துறையில், இந்திய தொல்லியல் ஆய்வுக்கழகம் மற்றும் டில்லி ஐ.சி.எச்.ஆர்., சார்பில், ராஜேந்திர சோழனின் வரலாறு காட்டும் தென்னிந்திய கட்டடம் மற்றும் கலை என்ற, கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், சென்னை பல்கலையின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர், திருமகன் பேசுகையில், இந்தியா, அதன் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டால் தான், உலக நாடுகளிலிருந்து வேறுபடுகிறது. நம், தொல்லியல் சின்னங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, வரலாற்று சான்றுகளை பாதுகாக்க வேண்டும், என்றார்.
இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின், சென்னை வட்டார கண்காணிப்பாளர், ஸ்ரீலட்சுமி பேசுகையில், சோழர்கள், ஓவியம், கலை, கட்டட பாணியில் தனிச்சிறப்பு பெற்றிருந்தனர், என்றார். இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின், தென்னிந்திய கண்காணிப்பாளர், கே.அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசியதாவது:சோழர் கால கோவில்களை விட, 1,300 ஆண்டு களுக்கு முந்திய நகர நாகரிக கட்டடங்களை தற்போது கீழடியில் கண்டுபிடித்துள்ளோம். இதுபோல், தமிழகத்தில் பல ஆய்வுகளை செய்து, தமிழக இலக்கியங்களுக்கு தேவையான வரலாற்று சான்றுகளை அளிக்க, தொல்லியல் அறிஞர்களும், மாணவர்களும் உழைக்க வேண்டும். அதற்கு, இது போன்ற கருத்தரங்குகள் பயன்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர், ஆர்.நாகசாமி பேசியதாவது: ராஜேந்திர சோழன், சோழ மன்னர்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவன். அவன், அலைகடல் நடுவில் படைக்கலம் நடத்தி, பல நாடுகளை வெற்றி பெற்றான். அவன் போர்த்திறம் கண்டு, நார்வே, ஜப்பான் போன்ற நாட்டு மன்னர்கள், அவர்களின் வெற்றி சின்னங்களை, ராஜேந்திரனுக்கே வழங்கினர். அவன் அகந்தை அற்றவனாக இருந்ததற்கு, அவன் கொண்டிருந்த பக்தி காரணமாக இருந்தது. அதனால், இறைவனுக்கு புகழ் சேர்க்க, வடக்கே தற்போதைய கோல்கட்டாவை வென்று, அந்த மன்ன னின் தலையில் கங்கை நீரை சுமக்க வைத்து, கங்கை கொண்ட சோழபுரம் இறைவனுக்கு குடமுழுக்கு செய்தான். ராஜேந்திர சோழன், சிறுவயதிலேயே வேதங்கள், குதிரை ஏற்றம், யானை ஏற்றம், வாள் பயிற்சி பெற்றான். அவன் தாயின் நினைவை போற்றும் வகையில், திருச்சிக்கு அருகில் உள்ள, சோழமாதேவி, புத்துார் ஆகிய இடங்களில், வேத கல்லுாரிகளை நிறுவினான். இதை, கரந்தை செப்பேடு கூறுகிறது. அவன் இறக்கும் தருவாயில், நாட்டு மக்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரை அழைத்து, தன் மகன்களை மடியில் இட்டு, தனக்கு அனைவரும் ஆதரவளித்தது போல், மகன்களுக்கும் ஆதரவளித்து, நாட்டு மக்களுக்கு பயன் தரும் நல்லாட்சி நிலைக்க துணை நிற்க வேண்டும் என, கேட்டு, உயிர் விட்டான்.இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில், இந்திய தொல்லியல் ஆய்வுக்கழகம் சார்பில், தென்னிந்திய பழம்பொருட்கள் மற்றும் புகைப்பட கண்காட்சி நடந்தது.