பதிவு செய்த நாள்
22
அக்
2016
11:10
முடங்கிக் கிடந்த, திருத்தணி முருகன் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்கும் பணி, ஏழு ஆண்டுகளுக்கு பின், தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.
அறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாக திருத்தணி முருகன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உட்பட பல்வேறு மாநில பக்தர்கள், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மலைக்கோவிலுக்கு வந்து, மூலவரை தரிசிக்கின்றனர். இந்நிலையில், முருகன் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்கும் பணி, 2009, நவ., 18ல், இந்து அறநிலைய துறை அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்டது.
25 அடிக்கு அடித்தளம், 11 அடிக்கு கல்ஹாரம், 122 அடி உயரத்திற்கு, ஒன்பதுநிலை ராஜகோபுரத்துக்கான அடிக்கல் நடப்பட்டது; 2011க்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், ஒப்பந்ததாரர் மற்றும் கோவில் நிர்வாகத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால், அடித்தளம் மற்றும் கல்ஹாரம் அமைத்ததோடு, பணி கிடப்பில் போடப்பட்டது. தொடர்ந்து, ஒன்பதுநிலை ராஜகோபுரம் கட்டுவதற்கு, கோவில் நிர்வாகம், மூன்று முறை டெண்டர் விட்டும், இப்பணிகளை செய்ய யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்தபதி ஒருவர், ராஜகோபுரம் பணிகளை மேற்கொள்வதற்கு, தாமாக வந்து, டெண்டர் எடுத்தார்.இதையடுத்து, இந்து அறநிலைய துறை ஆணையர் அனுமதியுடன், ராஜகோபுர கட்டுமான பணி, சிறப்பு பூஜைகளுடன் துவங்கியுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு பின், இப்பணி மீண்டும் துவங்கியுள்ளதால், அறநிலைய துறை சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.
18 மாதங்களில் நிறைவு: முருகன் கோவிலில் கட்டப்பட்டு வரும், ராஜகோபுர கல்ஹாரம் மற்றும் அடித்தளம் பணிகள் முடிந்து, தற்போது ஒன்பதுநிலை ராஜகோபுரத்துக்கான பணி துவங்கப்பட்டு உள்ளது. இதை முடிப்பதற்கு, 18 மாதங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரரின் துரித பணிகளால், ஒன்பது நிலைகளிலும் முருகப்பெருமானின் அலங்கார பொம்மைகள் இடம் பெறும். இவையின்றி, பக்தி பரவசத்துடன் மேலும் பல சிலைகள் உருவாக்கப்படும். ஆர்.நடராஜ ரத்தினம், உதவி கோட்ட பொறியாளர், திருத்தணி முருகன் கோவில்.