திருப்புவனம்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த துறவி அபிராமதாஸ் தியாசிஜி அக்21., காலை நடை பயணமாக திருப்புவனம் வந்திருந்தார்.
ரிஷிகேசில் "ராமானந்தம் துறவி என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வரும் இவர் இதுவரை ஐந்து முறை புனித பயணம் மேற்கொண்டு யாத்திரை ஸ்தலங்களை கடந்து வந்துள்ளார். உலக அமைதி வேண்டியும், நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் பாதயாத்திரை மேற்கொள்ளும் இவர் உடுத்தியிருக்கும் துணி, மாற்றுத்துணி தவிர வேறு எதையும் கொண்டு செல்வதில்லை. பாதயாத்திரை மேற்கொண்டுள்ள இவருக்கு 78 வயதாகிறது. வழியில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், பால் உள்ளிட்டவற்றை மட்டும் அருந்தி பயணம் மேற்கொண்டு வருகிறார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் முடித்த பின் ராமேஸ்வரம் செல்லும் வழியில் திருப்புவனம் வந்துள்ளார். அபிராமதாஸ் தியாசிஜியிடம் பயணத்தின் நோக்கம் குறித்து கேட்ட போது, இயற்கை உணவு வகைகளையே பயன்படுத்த வேண்டும். இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளை பின்பற்ற வேண்டும், இயற்கையை மதிக்க வேண்டும் என வலியுறுத்தி 2013 மார்ச் 11ல் ரிஷிகேஷில் பயணத்தை துவக்கியதாக தெரிவித்தார்.