பதிவு செய்த நாள்
24
அக்
2016
10:10
நாமக்கல்: ஐப்பசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி, சாந்த சொரூபியாக, 18 அடி உயரத்தில் நின்ற நிலையில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு விசேஷ தினத்தன்று, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன்படி, ஐப்பசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நேற்று காலை, 9:00 மணிக்கு சுவாமிக்கு வடமாலை சாற்றப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. முன்னதாக, சுவாமிக்கு மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சனம், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில், நாமக்கல் மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டுச் சென்றனர். பக்தர்களுக்கு, நீர் மோர் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.