அழகர் மலையில் பக்தர்கள் பாதம் பாதுகாக்க கோயிலில் தரை விரிப்புகள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2016 10:10
அழகர்கோவில்: அழகர்கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதங்களை வெயில் சூட்டிலிருந்து பாதுகாக்க நுழைவு வாயிலில் இருந்து கோயில் வரை பைபர் தரை விரிப்புகளை கோயில் நிர்வாகத்தினர் விரித்து உள்ளனர். அழகர் மலையில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோயில், சோலைமலை முருகன் கோயில் நுாபுரகங்கை தீர்த்தத்திற்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதில் சுந்தரராஜ பெருமாள் கோயில் கோட்டை நுழைவு வாயிலில் உள்ள 18ம் படி கருப்பண சுவாமி சன்னதி அருகில் காலணிகள் பாதுகாப்பு அறை உள்ளது. இங்கிருந்து கோயில் வரை 300 மீட்டர் துாரம் பக்தர்கள் நடந்து செல்ல வேண்டும். கோயில் முழுவதும் மன்னர்கள் அமைத்த கருங்கல்லால் ஆன தரை உள்ளது. வெயில் காலங்களில் ஏற்படும் அதிக வெப்பத்தால் கருங்கல் தரையின் சூடு அதிகரிப்பதால் பக்தர்களால் நடக்க முடியவில்லை.
பக்தர்கள் வசதிக்காக சில ஆண்டுகளுக்கு முன் 18ம் படி கருப்பண சுவாமி சன்னதி முதல் கோயில் வரை சூடு பிரதிபலிக்காத வெள்ளை நிற கலவை பூசப்பட்டது. நாளடைவில் அவை காணாமல் போயின. பகலில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சூடு தாங்காமல் பெரிதும் சிரமம் அடைந்தனர். இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்போது பக்தர்களின் பாதங்களை பாதுகாக்க 18ம் படி கருப்பண சுவாமி சன்னதி அருகில் இருந்து சுந்தரராஜ பெருமாள் சன்னதி வரை பைபர் தரை விரிப்புகளை கோயில் நிர்வாகத்தினர் விரித்துள்ளனர். இதனால் பகல் நேரங்களில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வெயிலின் கொடுமையில் இருந்து தங்கள் பாதங்களை காத்துக் கொள்கின்றனர்.