திருப்பாச்சூர் : திருப்பாச்சூர் வாசீஸ்வரர் சுவாமி கோவிலில், நேற்று, உழவார பணி நடந்தது. திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூரில் உள்ளது அறநிலைய துறைக்கு சொந்தமான தங்காதலி உடனுறை வாசீஸ்வரர் சுவாமி கோவில். இந்த கோவிலில், நேற்று, சென்னையைச் சேர்ந்த இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் பணி இறை சபை சார்பாக உழவார பணி நடந்தது. இதில், கோவில் வளாகத்தில் வளர்ந்த முட்செடிகள், கோவில் மண்டபங்களில் மேற்புறம் வளர்ந்திருந்த செடிகள் அகற்றப்பட்டன. பின், கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, சுவர்களுக்கு வர்ணம் பூசும் பணி நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உழவார பணியில் ஈடுபட்டனர்.