பதிவு செய்த நாள்
24
அக்
2016
11:10
திருநீர்மலை: திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் குளம் பராமரிப்பின்றி, குப்பை, பிளாஸ்டிக் தேங்கி, புற்கள் வளர்ந்து, மோசமான நிலையில் உள்ளது. திருநீர்மலையில், ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இக்கோவிலின் அடிப்புறத்தில் உள்ள குளத்தை சுற்றி, சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. சமீப காலமாக, குளத்தின் பராமரிப்பு படுமோசமாக உள்ளது. மதுபான பிரியர்கள் இரவில், சுற்றுச்சுவரை ஒட்டி, அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால், எங்கு பார்த்தாலும் மது பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்களாக சிதறி கிடக்கின்றன. சில இடங்களில் சுற்றுச்சுவர் உடைந்துள்ளது. குளத்தின் உட்பகுதியில், பிளாஸ்டிக், குப்பை தேங்கியுள்ளதோடு, புற்கள் வளர்ந்து, புதராக காணப்படுகிறது. குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்தை சுற்றியும், அதன் மேற்பகுதியிலும் செடிகள் வளர்ந்துள்ளன. கோவில் குளத்தை சீரமைத்து பராமரிக்க, நிர்வாகம் முன் வர வேண்டும். அதே நேரத்தில், குளத்தை சுற்றி மது அருந்துவதை தவிர்க்க, இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.