பதிவு செய்த நாள்
26
அக்
2016
11:10
சிவகாசி: குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் திருநாள் தீபாவளி பண்டிகை. புத்தாடைகள் அணிந்து பலகாரங்கள் உண்டு பட்டாசு களை வெடித்து உற்றார், உறவினர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது பண்டிகையின் சிறப்பம்சம்.
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும். அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.
சீர்மிகு விமர்சையாக திருவிழா கோலம் போல் தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வீடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு நாம் கொண்டாடும் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க இதோ ஆலோசனை :
* அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமே பட்டாசுகளை வாங்க வேண்டியது மிகவும் அவசியம். போலி தயாரிப்பு பட்டாசுகள் எதிர்பாராத நேரத்தில் வெடித்து ஆபத்தை ஏற்படுத்தும்.
* ஒரு பட்டாசு அல்லது மத்தாப்புகளை கொளுத்தும் முன்பு செய்ய வேண்டிய முதல் காரியம் அதன் அட்டைப் பெட்டியில் குறிப்பிட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அந்த பட்டாசினை பயன்படுத்தும் முறைகள் பற்றி தெரிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
* தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்குகள், குடிசைபகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற் றக்கூடிய பொருட்கள் அருகில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்ப்பது நல்லது.
*விளையாட்டு மைதானங்கள், திறந்த வெளிகளில் வெடிக்கலாம் .
*தண்ணீர், இது நெருப்பை அணைப்பதற்கு மட்டுமல்ல ஒருவேலை நமது உடலில் தீக்காயம் பட்டுவிட்டால் உடனடியாக பயன்படுத்த கூடியது. முதல் உதவி மருந்தும், ஒரு பக்கெட் தண்ணீராவது நீங்கள் பட்டாசு வெடிக்கும் இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
*ஒரு நேரத்தில் ஒரே பட்டாசினை மட்டுமே கொளுத்த வேண்டும்.வரிசையாக பல பட்டாசுகளை கொளுத்தினால் அது விபத்திற்கு காரணமாகலாம்.
*பற்ற வைத்த பட்டாசு வெடிக்க தாமதமானால் ஒரு போதும் அதை கையில் எடுப்பதற்கோ , மீண்டும் உடனே பற்றி வைப்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது. அந்த பட்டாசு இருமடங்கு வெடித்து விபத்தினை உருவாக்கலாம்.
*குழந்தைகள் பட்டாசினை தனியாக கொளுத்த அனுமதிக்க கூடாது.
*பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் பத்திரப்படுத்தி ஸ்டாக் பண்ணி வைப்பது ஆபத்தானது. தவிர்க்க முடியாத பட்சத்தில் அவற்றை வெப்பம் குறைந்த இடத்தில், குழந்தைள் பயன்படுத்தாத இடத்தில் வைக்கலாம். இதுவும் ஆபத்தானதே.
*ஒரு பட்டாசினை பற்ற வைக்கும் போது கண்களை பாதுகாக்கும் விதமாக கருநிற கண்ணாடியை அணிந்து கொள்வது நல்லது.
*மிக அதிகமான ஒளியை, அதிக வெளிச்சத்தை வெளிப்படுத்தும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வாங்கி பயன்படுத்துவது சட்டப்பட்டி குற்றம்.
*பட்டாசுகளை பயன்படுத்துவதற்கு நீண்ட ஊதுபத்தியை, நீண்ட கம்பி மத்தாப் பினை பயன்படுத்துவதே சிறந்தது.
*வாகனங்கள் அருகே அல்லது வாகனங்கள் சாலையில் வரும்போது வெடிகளை கொளுத்தி போடுவதையும் தவிர்க்க வேண்டும்.
*தரைச்சக்கரம், தரைச்சட்டி, பேன்சி பவுன்டேன்களை வீட்டின் உள்ளே விடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் விபத்துகளையும் வீட்டின் தரை பாழாவதையும் தவிர்க்லாம்.
*பட்டாசு வெடிக்கும் குழந்தைகளும் அவர்களுக்கு உதவியாகச் செயல்படும் பெரியவர்களும் கண்டிப்பாக கால்களில் ஷூ , செருப்பு அணிந்து கொண்டே பட்டாசுகளை கொளுத்தி விளையாட வேண்டும்.
*வெடிக்காத வெடிகளை தேடி எடுத்து மொத்தமாக போட்டு கொளுத்துவது மிகவும் ஆபத்தானது.
*எதிர்பாராத விதமாக பட்டாசினால் நெருப்புக் காயம் பட்டுவிட்டால் உடனடியாக காயம்பட்ட இடத்தை தண்ணீரில் நனைக்க வேண்டும். தீக்காயம் பட்ட இடம் எரிச்சல் அடங்கிக் குளிரும். வலி குறையும்.
தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றிலும் உள்ள தீசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறையவும் வாய்ப்பு உண்டு. பின்னர் ஒரு சுத்தமான துணியினால் தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றி விட வேண்டும் காயம் பட்டவரை அருகில் மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
* குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது காற்றில் பறக்க கூடிய ஆடைகளை அணிவது கூடாது.
குறிப்பாக பெண் குழந்தைகள் பாவாடை போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு
பட்டாசு கொளுத்தும் போது எரியும் விளக்கின் நெருப்பு பாவாடையில் பட்டு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
பட்டாசு கொளுத்தும் போது நைலான், பட்டு போன்ற துணிகளை அணியவே கூடாது.
* ஒரு வேளை உடலின் மீது தீப்பிடித்தால் ஓடாமல் தரையில் உருண்டு தீயை அணைக்க முற்பட வேண்டும்.