சிவகங்கை,: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில், கலை நுணுக்கத்துடன் ராஜகோபுர குடவரை தோரணவாயில் அமைந்துள்ளது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இந்த கோவில் 1860 முதல் 1880 வரை 20 ஆண்டுகள் கட்டப்பட்டன. சிவகங்கை மன்னரிடம் கோவில் கிராமங்களை குத்தகைக்கு பெற்று, அதில் கிடைத்த வருமானத்தில் கோவிலை நகரத்தார்கள் கட்டிஉள்ளனர். இதற்கான கற்கள் திருமலையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. கோவில் நுழைவுவாயிலில் 4 கற்துாண்கள் தாங்கி சதுர அமைப்புடன் சொக்கட்டான் மண்டபம் அமைந்துள்ளது. அதற்கு நடுவே மேற்கூரையில் 12 ராசிகளின் உருவங்கள் கற்களில் பொறிக்கப்பட்டு உள்ளன. துாண்களில் போதிய வேலைப்பாடுகள் மிகுந்துள்ளன. நான்கு துாண்களிலும் 8 திசைகளில் சிம்மங்கள் உள்ளன. மற்ற துாண்கள் 8, 16, 32 பட்டைகளில் அமைக்கப்பட்டு உள்ளன. ராஜகோபுரம் குடவரை தோரணவாயில் பார்ப்போரை அதிசயிக்க வைக்கும் வகையில் கலை நுணுக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உருட்டு, சதுரம், முறுக்கு என, 3 விதமான கம்பி வடிவில் கற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் அதில் பல கற்கள் இணைக்கப்பட்டபோதும், ஒரே கல் போன்று காட்சி தருகிறது. இதேபோல் கோவில் முழுவதும் வரி வர்க்க வேலைப்பாடுகள் சிறப்பாக அமைந்துள்ளன. இவற்றை கட்டட, சிற்ப கலை ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.