பதிவு செய்த நாள்
27
அக்
2016
11:10
புதுச்சேரி: புதுச்சேரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 கோடி மதிப்புள்ள ௧௧ ஐம்பொன் சிலைகளை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். தமிழகத்தில் சாமி சிலைகள் கடத்தல் வழக்கில், சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தீனதயாளன், ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவரது வீடுகள் மற்றும் குடோன்களில் பழங்கால கற்சிலைகள், ஐம்பொன் சிலைகள், யானை தந்தத்தால் ஆன பொருட்கள், பழங்கால ஓவியங்களை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 49 சிலைகள் எழும்பூர் கோர்ட்டில் ஒப்படைக்கப் பட்டன. அவை, 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என, தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
தீனதயாளனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், புதுச்சேரியைச் சேர்ந்த புஷ்பராஜன் என்பவரிடம் சிலைகளை வாங்கியதாக வாக்குமூலம் அளித்திருந்தார். சமீபத்தில் புஷ்பராஜனை போலீசார் கைது செய்து விசாரித்ததில், புதுச்சேரி உப்பளம் கோலாஸ் நகர் பெடரிக் ஒசானா வீதியில் உள்ள வீட்டில் சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு, புதுச்சேரி கோலாஸ் நகரில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி, பழமையான ௧௧ ஐம்பொன் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். அந்த வீட்டில் இருந்து நடராஜர் சிலைகள்-௫, திருமண கோலத்தில் சிவன் -பார்வதி சிலை, சோமாஸ்கந்தர், மகிஷாசுரமர்தினி, சந்திரசேகர், அம்மன், பார்வதி என ௧௧ சிலைகளை போலீசார் கைப்பற்றி, நேற்று வேனில் ஏற்றிச் சென்றனர்.
இச்சிலைகள், ௧ முதல் 3 அடி உயரம் கொண்டவை. 3 அடி உயர நடராஜர் சிலை மட்டும் ரூ.31 கோடியே 8 லட்சம் மதிப்புமிக்கது. மொத்தத்தில் இச் சிலைகளின் மதிப்பு ரூ.50 கோடிக்கு மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இச்சிலைகள், வேலுார் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த மேற்பாடி பகுதியில் உள்ள சிவன் கோவிலில் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போன சிலைகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சிலை பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டின் பின் பகுதியில், பழுதான நிலையில் போலீஸ் என எழுதப்பட்ட பழைய யமஹா மோட்டார் சைக்கிள் ஒன்று இருந்தது. இந்த பைக் மூலம் சிலைகள் கடத்தப்பட்டதா என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. புஷ்பராஜன் புதுச்சேரியில் இருக்கும் நாட்களில், அரியாங்குப்பத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற ஆசாரி அந்த வீட்டிற்கு வந்து, வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து, ரஞ்சித்குமாரை போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றினர். அப்போது, ரஞ்சித்குமாரின் தாய் எல்லம்மாள், மனைவி தனலட்சுமி ஆகிய இருவரும், போலீசாரின் கால்களில் விழுந்து, அவருக்கு எதுவும் தெரியாது என்று கதறி அழுதனர்.
சிலைகள் யாருக்கு சொந்தம்?: புதுச்சேரி கோலாஸ் நகர் வீட்டிலிருந்த சாமி சிலைகள், சிதம்பரத்தில் வாங்கியதற்கான அத்தாட்சி உள்ளது. அது தொடர்பாக கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என, ஐகோர்ட் வழக்கறிஞர் கூறினார். புதுச்சேரி கோலாஸ் நகரில், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்திய வீட்டிற்கு, சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் யாதவ் என்பவர் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இங்குள்ள சிலைகள், புதுச்சேரி ரோமன் ரோலண்ட் வீதியில் வசிக்கும் கொண்டப்பா குடும்பத்திற்கு சொந்தமானது. 30 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டப்பா இறந்து விட்டார். பழங்கால பொருட்களை சேகரிக்கும் பழக்கமுள்ள, கொண்டப்பா குடும்பத்திற்கு சொந்தமாக ஆர்ட் கேலரி உள்ளது. இங்குள்ள சிலைகள் கொண்டப்பாவின் மகள் வணிலா என்பவருக்கு சொந்தமானது. புஷ்பராஜன் என்பவர் யார் என்பதே வணிலா குடும்பத்தினருக்கு தெரியாது. இந்த சிலைகளை, 1976ம் ஆண்டு, சிதம்பரத்தில் கொண்டப்பா குடும்பத்தினர் வாங்கியதற்கான அத்தாட்சி உள்ளதுடன், கோர்ட்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரோமன் ரோலண்ட் வீதியிலுள்ள வீட்டில் அதிகளவில் உள்ள சிலைகளை பாகப் பிரிவினை செய்வது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். சிலைகள் கொண்டப்பா குடும்பத்திற்கு சொந்தமானது என்பதற்கான அத்தாட்சி மற்றும் நீதிமன்ற ஆணையை, காண்பித்து விளக்கம் அளிக்க முயன்ற, வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் யாதவிடம், எதுவாக இருந்தாலும் என்னை அலுவலகத்தில் சந்தித்து தெரிவியுங்கள் என கூறி, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் புறப்பட்டுச் சென்றார்.