பதிவு செய்த நாள்
27
அக்
2016
11:10
கூடலுார்: கூடலுார் அருகே, ஆதிவாசி மக்களின் நெற்கதிர் அறுவடை திருவிழா சிறப்பாக நடந்தது. கூடலுார் புத்துார்வயல் பகுதியில் வாழும் ஆதிவாசி மக்களின் சார்பில், ‘பூ புத்தரி’ என்று அழைக்கப்படும், நெற்கதிர் அறுவடை திருவிழா, நம்பாலக்கோட்டை வேட்டைகொருமகன் கோவிலில் துவங்கியது. அங்கு நடந்த சிறப்பு பூஜையை தொடர்ந்து, ஆதிவாசி மக்கள், நெற்கதிர் அறுவடைக்காக, புத்துார் வயல் பகுதிக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு, குலதெய்வத்துக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்து, பாரம்பரிய இசையும், நெற்கதிர் அறுவடை பணியை துவங்கினர். அதனை, மூன்று கட்டாக கட்டி, 10 நாட்கள் விரதமிருந்த ஆண்கள், தலையில் சுமந்து, வயலை மூன்று மூறை சுற்றி வந்தனர். பின்பு, நெற்கதிரை பகவதி அம்மன் திறந்த மண்டபதற்கு எடுத்து வந்து பூஜை செய்தனர். தொடர்ந்து, பழங்குடி பெண்களின் பராம்பரிய நடன நிகழ்ச்சியும் நடந்தது. அங்கிருந்து, பூஜிக்கப்பட்ட நெற்கதிர்,மங்குழி பகவதி அம்மன் கோவில்; ஸ்ரீமதுரை விஷ்ணு கோவில்; நம்பாலாகோட்டை வேட்டைகொருமகன் கோவில்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கும் பூஜைகள் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதன்பின்பு, பிற பகுதிகளை அறுவடை பணிகள் நடந்தன.