பதிவு செய்த நாள்
27
அக்
2016
11:10
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கசவனம்பட்டியில் மவுன நிர்வாணசாமி குரு பூஜையை தீபாவளியாக கொண்டாடுகின்றனர். கசவனம்பட்டியில் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தவர், ஜோதி மவுன நிர்வாண சுவாமி. இங்கு அவருக்கு நினைவிடம் உள்ளது. இவரது குருபூஜை தீபாவளியை ஒட்டி வரும். இதனால், கிராமத்தில் பெரும்பாலோர் தீபாவளி கொண்டாடுவதில்லை. தீபாவளி நேரத்தில் மாலை அணிந்து ௪௮ நாட்கள் விரதம் இருக்கின்றனர். குருபூஜை அன்று விரதம் முடித்து தீபாவளி கொண்டாடுகின்றனர். குருபூஜைக்கு பிறகு தீபாவளி வந்தால் கொண்டாடுகின்றனர்; அதுவும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான்.
குருபூஜை : ஜோதி மவுன நிர்வாண சுவாமியின் 34வது குருபூஜை நவ.,3ல் துவங்குகிறது. சிவனுாரணி என்ற பாண்டியன் கிணறு, திருமலைக்கேணி, திருமூர்த்தி மலை, சுருளி, காசி, ராமேஸ்வரம், கொடுமுடி, அழகர்மலை, சதுரகிரி, வைகை, பம்பையில் இருந்து எடுத்து வரப்படும் புனித தீர்த்தங்களால் சுவாமிக்கு அபிஷேம் செய்வர். நவ.,4ல் உலக நன்மைக்காக மகாயாகம் நடக்கிறது. கிராமத்தினர் கூறியதாவது: டி.ஜெகநாதன், 63, கசவனம்பட்டி: 25 ஆண்டுகளாக விரதம் இருக்கிறேன். 34 ஆண்டுகளாக குருபூஜைக்கு முன் தீபாவளி வந்தால் கொண்டாடுவதில்லை. குருபூஜைதான் எங்களுக்கு தீபாவளி. ஆனால், பட்டாசுகள் வெடிக்க மாட்டோம். ஆதிலிங்கம், 54, வெள்ளம்பட்டி: தீபாவளிக்கு குழந்தைகளுக்கு மட்டும் ஆடைகள் எடுப்போம்.எஸ்.லீலாவதி, 30, கசவனம்பட்டி: தீபாவளி அன்று வீடுகளை சுத்தம் செய்து வழிபாடு நடத்துவோம். பலகாரம் செய்வோம்; புத்தாடைகள் அணிய மாட்டோம். குருபூஜை அன்றுதான் அணிவோம்.இவ்வாறு கூறினர்.