பதிவு செய்த நாள்
28
அக்
2016
09:10
தீபாவளிக்கு மறுதினம் சுமங்கலிப் பெண்களே கேதார கவுரிவிரதம் அனுஷ்டிப்பது வழக்கம். மகாகவுரியான அம்பிகை சிவ பெருமானின் முழு அருளையும் அன்பையும் பெற 21 நாட்கள் விரதம் மேற்கொண்டாள். அதுவே கேதாரீஸ்வரர் விரதம் அல்லது கேதார கவுரி விரதம் என்று போற்றப்படுகிறது. அதன் பயனாக ஈசன் உடலில் சரிபாதியைப் பெற்றாள் அம்பிகை. இந்த விரதத்தை பெண்கள் மேற்கொண்டால் கணவனின் முழு அன்பைப் பெறுவதுடன், பதினாறு பேறுகளையும் பெற்று வாழலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
கவுரி கங்கணம்: கவுரி பூஜையின் முக்கியமான நிகழ்ச்சி நோன்புக் கயிறுகளைப் பூசித்துக் கட்டிக் கொள்வதாகும். சுவர்ண கவுரி பூஜையில் 16 முடிச்சுகளை இட்டும், கேதார கவுரி பூஜையில் 21 முடிச்சுகளை இட்டும், நோன்புக் கயிறுகளை வழிபாட்டில் வைப்பார்கள். இதில் ஒவ்வொரு முடிச்சிலும் கவுரிதேவியின் ஒவ்வொரு பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். பூஜையின் முடிவில் இந்த நோன்புக் கயிறுகளை வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். ஆதிநாளில் 21 இழைகளைக் கொண்ட நூலில், 21 நவரத்தின மணிகளைக் கோத்து அதனை பூஜித்து அணிந்தனர். பிறகு, ரத்தின மணிகளுக்குப் பதிலாகத் தங்கம் அல்லது வெள்ளியில் செய்த மணிகளைக் கோத்து அணிந்தனர். இப்போது முடிச்சுகள் இடப்படுகின்றன (மணிகளால் கோக்கப்பட்டதால் அது தோரபந்தன் என்றும் அழைக்கப்பட்டது. தோரா- மணி). இந்நாளில் சிவப்பு அல்லது மஞ்சள் பட்டுக் கயிறுகளை அணிந்துகொள்கின்றனர். அதில் குஞ்சங்களை அமைத்துப் பொன் வண்ணச் சரிகை நூலால் அலங்கரிப்பதும் உண்டு. நோன்புக் கயிறுகளுக்குக் கவுரி கங்கணம் என்பது பெயர். இவற்றை வலது மணிக்கட்டில் கட்டிக்கொள்ள வேண்டியதே முறை. பெண்ணை திருமணம் செய்து கொடுத்த பின்பு, ஆண்டுதோறும் நோன்புக் கயிறுகளை அதிசரத்துடன் பெண்ணுக்கு தாய் வீட்டினர் அனுப்பும் வழக்கம், பல குடும்பங்களில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அம்பிகையை 16 வடிவங்களாகப் போற்றி, சோடசகவுரி வழிபாடு செய்தால் சகல பாக்கியங்களையும் பெறலாம் என்கிறது ஸ்கந்த புராணம்.
ஞான கவுரி: உலக உயிர்களுக்கு சக்தி கொடுப்பது நானே என்று சிவபெருமானிடம் வாதிட்டாள் சக்தி தேவி. உடனே சிவபெருமான் உலக உயிர்களின் அறிவை ஒரு கணம் நீக்கினார். அதனால் உலக இயக்கம் நின்று பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதைக்கண்ட தேவி, உயிர்களுக்கு சக்தி மட்டுமே போதாது என்பதை உணர்ந்து இறைவனைப் பணிந்தாள். பின்னர் இறைவன் மீண்டும் உலக உயிர்களுக்கு ஞானமளித்து, அறிவின் திறனை தேவி உணரும்படி செய்தார். தன் நாயகனிடம் வாதிட்டதால் ஏற்பட்ட தோஷம் நீங்க வன்னி மரத்தடியில் அமர்ந்து தவம் செய்தாள் அம்பிகை. அவளது தவத்தினைப் போற்றிய இறைவன், தன் உடலில் பாதியை அளித்து அறிவின் அரசியாக்கினார். எனவே ஞான கவுரி என்று போற்றப்பட்டாள். சிவன்கோயில்களில் அமைந்துள்ள அம்பாள் சன்னிதியில் அருள்புரியும் அம்பிகையை, ஞான கவுரியாக மனதில் நினைத்து வழிபட்டால் ஞானம் பெருகும்; எண்ணியது நிறைவேறும் விஜயதசமியில் வழிபட கூடுதல் பலன் கிட்டும்.
அமிர்த கவுரி: உலகில் வாழும் உயிர்களுக்கு வளமான வாழ்வையும் ஆயுளையும் தருவத அமிர்தம். மிருத்யுஞ்ஜயரான இறைவனின் தேவியானதால் கவுரிக்கு அமிர்த கவுரி என்று பெயர். இந்த தேவியை வழிபடுவதால் ஆயுள் மற்றும் வம்சம் விருத்தியாகும். இந்த கவுரி அருள்பாலிக்கும் தலம் திருக்கடவூர் ஆகும். திருக்கடவூர் அபிராமி அமிர்த கவுரி என்று போற்றப்படுகிறாள்.
சுமித்ரா கவுரி: இறைவனின் உடலில் பாதி இடத்தைப் பிடித்த தேவி, அவரைப் போலவே உயிர்களுக்கு உற்ற தோழியாகத் திகழ்வதால் சினேகவல்லி என்று போற்றப்படுகிறாள். தேவகோட்டைக்கு அருகிலுள்ள திருவாடனைத் திருத்தலத்தில் அருள்புரியும் அம்பிகைக்கு சினேகவல்லி என்று பெயர். இந்த அன்னையை வடமொழியில் சுமித்ரா கவுரி என்று போற்றுவர். இவனை வழிபட நல்ல சுற்றமும் நட்பும் கிட்டும்.
சம்பத் கவுரி: வாழ்வதற்கு மிகவும் அவசியமானது உணவு, உடை, உறைவிடம். இவற்றை சம்பத் என்பர். அந்தக் காலத்தில் பசுக்களும் உயர்ந்த செல்வமாகப் போற்றப்பட்டன. அத்தகைய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்புரிபவள் சம்பத் கவுரி. இந்த அம்பிகை பசுவாக உருவெடுத்து சிவபூஜை செய்த திருத்தலங்கள் உண்டு. எனவே கோமதி, ஆவுடை நாயகி என்றும் போற்றுவர். இந்த கவுரியை திருச்சிக்கு அருகில் உள்ள துறையூர் தலத்தில் சம்பத் கவுரி உடனாய நந்தீஸ்வரர் கோயிலில் தரிசிக்கலாம். மேலும், காசி - அன்னபூரணியையும் மகாமங்கள கவுரி, சம்பத் கவுரி என்று போற்றுவர். இந்த தேவியை வழிபட செல்வ வளம் பெருகும்.
யோக கவுரி: யோக வித்தைகளின் தலைவியாக மகாகவுரி திகழ்கிறாள். இவளையே யோக கவுரி என்றும் போற்றுவர். யோகங்களை வழங்கும் அம்பிகை யோகாம்பிகை; யோக கவுரி எனப்படுகிறாள். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் எழுந்தருளியுள்ள கமலாம்பிகையே யோக கவுரி ஆவாள். திரிபங்க ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அற்புதமான திருக்கோலம். அங்கு அருள்புரியும் தியாகராஜரின் ரகசியங்கள் யோக வித்தை எனப்படுகின்றன. இந்த ரகசியங்கள் அனைத்தும் அறிந்தவள் யோக கவுரியான கமலாம்பிகை. இந்த தேவியை வழிபட யோகா, கல்வி, இசை சம்பந்தமான கலைகளில் சிறந்து விளங்கலாம்.
வஜ்ரச்ருங்கல கவுரி: உறுதியான, ஆரோக்கியமான உடலை வஜ்ரதேகம் என்பர். அத்தகைய உடலை உயிர்களுக்குத் தரும் தேவியே வஜ்ரச்ருங்கலகவுரி என்று போற்றப்படுகிறாள். கருடவாகனத்தில் பவனிவரும் இந்த கவுரி சக்கரம், கத்தி ஆகியவற்றுடன் நீண்ட சங்கிலியையும் கையில் ஏந்தியிருப்பாள். (ச்ருங்கலம் என்பதற்கு சங்கிலி என்று பொருள்.) வைரமயமான சங்கிலியைத் தாங்கியிருப்பதால் வஜ்ரச்ருங்கல கவுரி என்பர். சென்னைக்கு அருகிலுள்ள திருவொற்றியூர் தலத்தில் அருள் புரியும் வடிவுடையம்மனே இந்த கவுரியாகத் திகழ்கிறாள். இந்த அன்னையை வழிபட உடல் உறுதியாகத் திகழும்; வலுவுடன் காட்சி தரும்.
த்ரைலோக்ய மோகன கவுரி: மனதிற்கு உற்சாகத்தையும், உடலுக்கு தெய்வீக சக்தியையும் அளிக்கும் சக்தி கொண்டவள். காசியில் நளகூபரேஸ்வரர் கோவிலுக்கு மேற்குப் பக்கத்திலுள்ள குப்ஜாம்பரேசுவரர் சிவன்கோயிலில் இந்த தேவிக்கு தனிச்சன்னிதி உள்ளது. தமிழகத்தில், திருநெல்வேலியிலுள்ள நவகயிலாயங்களுள் முதல்தலமான பாபநாசத்தில் அருள்புரியும் உலகம்மை எனும் விமலை சக்தியே த்ரைலோக்ய மோகன கவுரியாகப் போற்றப்படுகிறாள். கிரக தோஷங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை நீக்கி மகிழ்ச்சியைத் தருபவள். பெண்கள் தீர்க்கசுமங்கலியாக - மகிழ்வுடன் வாழ அருள்பவள்.
சுயம்வர கவுரி: சிவபெருமானை தன் மணாளனாக எண்ணியவாறு நடந்துசெல்லும் கோலத்தில் காட்சி தருபவள். மயிலாடுதுறை - திருவாரூர் வழியிலுள்ள திருவீழிமிழலை அம்மையை சுயம்வர கவுரி என்பர். இவளை வழிபட மனதிற்குப் பிடித்த மணாளன் அமைவார்.
கஜ கவுரி: காசி அன்னபூரணி கோயிலில் கஜகவுரிக்கு தனிச்சன்னிதி உள்ளது. தமிழகத்தில், ராமேஸ்வரத்தில் அருள்புரியும் பர்வதவர்த்தினி அன்னையே கஜ கவுரியாகப் போற்றப்படுகிறாள். இந்த தேவியை வணங்கினால் குழந்தைச் செல்வம் கிட்டும்; வம்சம் விருத்தியாகும்.
விஜய கவுரி: நற்செயலால் ஒருவன் பெரிய அந்தஸ்தை அடைந்திருந்தாலும், அதன் முழுப்பயனையும் அனுபவிக்கச் செய்பவள் விஜயகவுரி. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் - வண்டார்குழலி கோயிலில் மகாகாளி அருள்புரிகிறாள். இத்தலத்திற்கு வருபவர்கள் முதலில் இந்த தேவியை வழிபட்டபின்தான் இறைவனை வழிபட வேண்டும். இது இறைவன் தந்த வரம் என்பதால் இந்த காளி விஜய கவுரி எனப்படுகிறாள். இறைவனுடன் போட்டி நடனமாடிய இந்த தேவியை வழிபட்டால் எதிலும் வெற்றி கிட்டும்; பகைவர்கள் விலகுவர்.
சத்யவீர கவுரி: கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர்களுக்கு உறுதுணையாக இருப்பவள் இந்த அன்னை நாகை மாவட்டம் திருவெண்காட்டில், சுவேதாரண்யேஸ்வரருடன் இணைந்து அருள்புரிகிறாள் பிரம்ம வித்யாம்பிகை. இத்தேவியை வழிபட கொடுத்த வாக்கினைக் காப்பாற்றும் திறன் கிட்டும்; பூர்வஜென்ம பாவங்கள் நீங்கும்.
வரதான கவுரி: வள்ளல் மனம் கொண்டவர்களுக்கு அருள்புரிபவள் இந்த அன்னை. பரந்தமனம் கொண்டவர்கள் விரும்பும் வரங்களை தானமாக வழங்குவதால் இவள் வரதான கவுரி என்று போற்றப்படுகிறாள். திருவையாற்றில் அருள்புரியும் அறம்வளர்த்த நாயகியை வரதான கவுரி என்று போற்றுவர். இந்த தேவியை வழிபட்டால் கருமிகூட கொடைவள்ளல் ஆவான் என்பர்.
சுவர்ண கவுரி: ஒரு பிரளய காலத்தின் முடிவில் கடலின் நடுவே சுவர்ணலிங்கம் தோன்றியது. இதனைக் கண்ட தேவர்கள் அதனைப் பூஜித்தார்கள். அப்போது அதிலிருந்து பொன்மயமாக ஈசனும், பொற்கொடியாக பராசக்தியும் தோன்றினர். எனவே, தேவியை சுவர்ணவல்லி என்று போற்றினார்கள். கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் மங்களாம்பிகையே சுவர்ண கவுரியாக விளங்குகிறாள். இவளை வழிபட குபேர வாழ்வு கிட்டும். குலதெய்வத்தின் அருளும் கிட்டும். இல்லத்தில் தங்க நகைகள் சேரும். தொழிலில் லாபம் கிடைக்க அருள்பவள்.
சாம்ராஜ்ய மகாகவுரி: அன்பையும் வீரத்தையும் ஒருங்கே அருளும் தேவியாவாள். தலைமைப் பதவியைத் தரும் இவள் ராஜராஜேஸ்வரியாகவும் வழிபடப்படுகிறாள். இந்த தேவியின் அருள் இருந்தால் ராஜயோகம் கிட்டும். உயர்பதவிகள் தேடிவரும். மதுரை மீனாட்சியே சாம்ராஜ்ய மகாகவுரியாகப் போற்றப்படுகிறாள்.
அசோக கவுரி: துன்பமற்ற வழ்வைத் தருபவள் இவள். ஈரோடு மாவட்டம், பவானி திருத்தலத்தில் அருளும் வேதநாயகியே அசோக கவுரியாவாள். மகிழ்ச்சியான வாழ்வைத் தருவதால் அசோக கவுரி எனப்படுகிறாள். இந்த தேவியை வழிபட துன்பங்கள் நீங்கும்; சோகம் மறையும்; சுகமான வாழ்வு கிட்டும்.
விஸ்வபுஜா மகாகவுரி: தீய சக்திகளை அழித்து நல்வினைப் பயன்களைத் தருபவள். தூய எண்ணங்களை மனதில் வளரச் செய்து, விருப்பங்களை நிறைவேற்றுவதால் மனோரத பூர்த்தி கவுரி என்றும் போற்றுவர். திருவிடைமருதூர் தலத்தில் விளங்கும் ஒப்பிலாமுலையாள் எனும் அதுல்ய குசலாம்பாள் அன்னையே மேற் சொன்ன கவுரியாகத் திகழ்கிறாள். இந்த தேவியை வழிபட்டால் வேண்டியது கிட்டும்.
அம்பிகையான கவுரி பலவித திருப்பெயர்களில் எழுந்தருளியிருந்தாலும், பக்தியுடன் விரதம் மேற்கொண்டு மனதில் எண்ணி வழிபட்டாலே போதும்; பதினாறு செல்வங்களையும் தருவாள்.