பதிவு செய்த நாள்
28
அக்
2016
12:10
பழநி: பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நவ.,5ல் சூரசம்ஹாரம் நடப்பதால் அன்று தங்க ரதம் புறப்பாடு கிடையாது.
பழநி மலைக் கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.,31ல் காப்பு கட்டுதலுடன் துவங்கி ஏழு நாட்கள் நடக்கிறது. நவ.,5ல் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்று அதிகாலை 4:00 மணிக்கு மலைக்கோயில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், அதிகாலை 4:30 மணிக்கு விழா பூஜை, நைவேத்தியம் நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை மதியம் 1:30 மணிக்கு நடக்கிறது. மதியம் 3:00 மணிக்கு சின்னக்குமார சுவாமி அசுரர்களை வதம்புரிவதற்காக மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியுடன் சன்னதி நடை அடைக்கப்படும்.
இதனால் இரவு 7:00 மணி தங்க ரதத்தில் சின்னக்குமாரசுவாமி புறப்பாடு கிடையாது. திருஆவினன்குடியில், பராசக்தி வேலுக்கு பூஜை செய்யப்பட்டு மாலை 6:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு மேல் சுவாமி மலைக்கோயிலுக்கு புறப்படாகி, சம்ப்ரோட்சண பூஜைக்கு பின் அர்த்த ஜாமம் பூஜை நடைபெறும்.விழாவின் ஏழாம் நாளான நவ.,6ல் மலைக்கோயிலில் காலை 11:00 மணிக்கு வள்ளி தேவசேனா உடனான சண்முகருக்கும், பெரியநாயகியம்மன் கோயிலில் இரவு 7:00 மணிக்கு முத்துக் குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.