பதிவு செய்த நாள்
28
அக்
2016
12:10
திருநெல்வேலி: அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் திருக்கோயிலில் அக்., 28 ஐப்பசி திருக்கல்யாணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடந்தது.
திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அம்மன் சன்னதியில் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடக்கும் உற்சவ நாட்களில் தினமும் காலையும், இரவிலும் அம்மன் சன்னிதியிலிருந்து நான்கு ரத வீதிகளிலும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. அக்., 27, கம்பா நதி காட்சி மண்டபத்தில் சுவாமி, காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. அக்., 28 அதிகாலை 4.15 மணிக்கு அம்மன் சன்னதி அருகே ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
காந்திமதியம்பாள் மணப்பெண்ணாகவும், சுவாமி நெல்லையப்பர் மாப்பிள்ளையாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். வழக்கமான திருமணத்தை போல, காந்திமதியின் சகோதரர் திருமால் நெல்லையப்பர் கோயிலில் நெல்லை கோவிந்தராக அருள்பாலிக்கிறார். அவர், நெல்லையப்பரின் பாதங்கள் கழுவினார். தொடர்ந்து அம்பாளை சுவாமிக்கு தாரை வார்த்து கொடுத்தார். சுவாமி, அம்பாள் மாலைமாற்றிக்கொண்டனர். திரளான பெண்கள் பங்கேற்றனர். அக்.,28 துவங்கி 30ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அக்.31ல் சுவாமி, அம்பாள் மறுவீடு பட்டணபிரவேசம் வைபவம் நடைபெறுகிறது.