Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவுர்ணமி தவிர, அமாவாசை, சிவராத்திரி, ... சாமிக்குப் படைக்கும் பழத்தில் ஊதுபத்தியைக் குத்தி வழிபடுவது சரியா? சாமிக்குப் படைக்கும் பழத்தில் ...
முதல் பக்கம் » துளிகள்
நவகிரக தோஷங்களும் நன்மைதரும் கோயில்களும்!
எழுத்தின் அளவு:
நவகிரக தோஷங்களும் நன்மைதரும் கோயில்களும்!

பதிவு செய்த நாள்

09 நவ
2016
04:11

நவகிரக தோஷங்கள் இருக்கிறதா என்று தெரியாமலே வெறும் அறிகுறிகளை மட்டும் வைத்து பரிகாரங்களைச் செய்வது தவறாகிவிடுமோ என்று சிலருக்குத் தோன்றலாம். நிச்சயம் அப்படி ஓர் எதிர்மறை விளவு ஏற்படவே ஏற்படாது என்பதுதான் உண்மை. உதாரணமாக குடும்பத்தில் ஏற்படும் மன வருத்தங்களுக்கு சுக்ரனின் பாதிப்புதான் காரணம் என்று நினைத்து நீங்களாகவே பரிகாரங்களைச் செய்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு ஜாதக ரீதியாக அந்த தோஷம் இல்லாவிட்டாலும் அந்தப் பரிகாரத்தைச் செய்ததால் தோஷமோ அல்லது எதிர்விளைவோ நேர்ந்துவிடாது அதற்கு பதிலாக அந்த கிரகத்தின் ஆசி கூடுதலாகக் கிடைத்து பிரச்னைகள் சீக்கிரமே தீர்வாகும்.

எனவே உங்களுக்கு ஜாதகரீதியாக எந்த கிரக தோஷம் இருக்கிறது என்பது தெரிந்திருந்தாலும் சரி அல்லது அவரவர்க்கு உரிய சங்கடம், பிரச்னைகளுக்கு ஏற்ப நீங்களாகத் தீர்மானித்தாலும் சரி, நவகிரக தோஷங்களில் அவரவர்க்கு உரியதைச் செய்யுங்கள். நிச்சயம் தெய்வத்தின் அருளும் கிரகங்களின் அனுகிரகமும் கிட்டும். வாழ்க்கை வசந்தமாகும்.

சுக்ரன் தோஷம்: சுக்ரன், வெள்ளி, பார்க்கவன், சுக்ராச்சாரி, அசுர குரு என்றெல்லாம் உயர்வாகச் சொல்லப்படும் சுக்ர பகவான் நவகிரகங்களின் மிகமிக முக்கியமானவர். குரு, சனி, ராகு, கேது போல இவரது பெயர்ச்சியை பலரும் பார்ப்பதில்லை, என்றாலும் சுக்ரனின் அமைப்பு அவரவரது ஜனனகால ஜாதகத்தில் எப்படி அமைந்திருக்கிறதோ அதை ஒட்டியே அவரது குடும்ப வாழ்க்கை அமையும். காரணம் களத்திரகாரகன், அதாவது இல்லற அமைப்புக்கான கிரகம், சுக்ரன்தான். சுக்ரனின் அமைப்பினை ஒட்டியே தம்பதியருக்கு இடையே அன்யோன்யம் நிலவும் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் பொதுவான விதி. அதேசமயம் அவரவர் ஜாதகத்தில் உள்ள பிற கிரகங்களின் அமைப்பினை ஒட்டியே சுக்ரதோஷம் இருக்கிறதா? இல்லையா? என்பதை முழுமையாகக் கணிக்க இயலும்.

சுபகாரியங்கள் நடக்கவும், வீட்டில் சுபிட்சம் நிலவவும், செல்வம் சேரவும்  சுக்ரனின் அமைப்பு நன்றாக இருப்பது அவசியம். உங்கள் குடும்பத்தில் தம்பதியரிடையே ஒற்றுமை இன்மை, இளம் வயதினருக்கு காதல் சங்கடங்கள், என்னதான் வசதி இருந்தாலும் புதிய ஆடைகள், அணிமணிகள் அணிவதில் தடைகள், கழிவு உறுப்புகளில் உபாதை, மறைமுகப் பிரச்னைகள், பெரிய மனிதர்களால் சங்கடங்கள், அதிர்ஷ்டம் கைக்கு எட்டுவதுபோல் நெருங்கி வந்து நழுவிப் போதல், வாகனத்தில் அடிக்கடி பழுது எதிர்பால் இனத்தவரால் சங்கடங்கள் என்று உங்கள் நிம்மதி தடைப்படுகிறதா? அப்படியானால் உங்களுக்கு சுக்ரதோஷம் இருக்கலாம்.

இத்தகைய தடைகள் இருந்தாலோ அல்லது உங்களுக்கு சுக்ரதோஷம் இருப்பது தெரிந்தாலோ நீங்கள் செல்ல வேண்டிய கோயில் சுக்ரபகவான் சிவவழிபாடு செய்த தலமான வெள்ளீஸ்வரர் திருக்கோயிலுக்குத்தான். அன்னை காமாட்சி சிவபெருமானை எண்ணி தவம் இருந்த மாங்காடு தலத்தில், சுக்ரபகவானும் தனது சாபம் நீங்கிட ஈசனை நினைத்து தவம் இருந்தார். அப்போது சிவபெருமான் இருவரில் எவருக்கு முதலில் காட்சி தருவது என்று யோசித்தபோது, காமாட்சி அன்னை, அடியவர்க்கே முதலிடம் என்று சொல்லி, முதல் தரிசனத்தை சுக்ரபகவானுக்கே அளிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினார். அதையடுத்து சிவனார், சுக்ரனுக்குக் காட்சி தந்து அவரது பார்வைக் குறைபாட்டை நீக்கி, சாப விமோசனமும் அளித்தார். அந்தத் திருக்கோயில் மாங்காட்டில் காமாட்சி அன்னை திருக்கோயிலுக்கு மிக அருகிலேயே இருக்கிறது.

வெள்ளியாகிய சுக்ரனுக்குக் காட்சியளித்ததால், வெள்ளீஸ்வரர் என்ற திருப்பெயரோடு காட்சி தரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு வலம் வருவது, சுக்ரதோஷம் நீக்கும். அதோடு பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் வணங்கிடவும் ஏற்ற தலம் இது.

வெள்ளீஸ்வரர் என்ற திருப்பெயரோடு ஈசன் அருளும் மற்றொரு தலம் மயிலாப்பூரில் இருக்கிறது. அங்கே சென்று வணங்குவதும் நற்பலன் தரும். நவகிரக தலங்களில் சுக்ரன் சிவபெருமானை வேண்டி வரம்பெற்ற தலம் கஞ்சனூர். அங்கே சென்று இறைவன், இறைவியை ஆராதித்து, பின்னர் சுக்ரனுக்கு உரிய ஆராதனைகளைச் செய்வது சிறப்பான பலன் தரும்.

வெள்ளிக்கிழமையில் சுக்ரவார அம்மனாக காட்சி தரும் அம்பிகையை ஆராதிப்பது திருமணத் தடைகளைப் போக்குவதோடு, தம்பதியரிடையே அன்யோன்யம் ஏற்படவும் செய்யும். வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் தாயாருக்கு தாமரை மலர் தந்து ஆராதனை செய்வது சுக்ர தோஷ நிவர்த்தி அளிக்கும். குங்கும அர்ச்சனை செய்வது குடும்ப நிம்மதியை நிலைக்க வைக்கும்.

சுக்ரனுக்கு உரிய வெள்ளிக்கிழமையையே தன்னுடையதாக ஏற்றருளினாள் அம்பிகை. அதனால் வெள்ளிக்கிழமைகளில் அருகில் உள்ள சிவாலயங்கள் சென்று அம்பிகையை வணங்குவதும் உயர்வான பலன் தரும்.

வெள்ளிக்கிழமைகளில் அசைவத்தைத் தவிர்ப்பது அவசியம். அன்றைய தினம் இரவில் அரிசி சேர்த்த உணவை தவிர்ப்பதும் நல்லது. மாதம் ஒரு வெள்ளிக்கிழமை அவசியம் மகாலட்சுமி அல்லது பார்வதி பிரபலமாக உள்ள பெருமாள் அல்லது சிவன் கோயிலுக்குச் செல்லுங்கள். அங்கே நடக்கும் அன்னதானத்திற்கு இயன்ற கைங்கர்யம் செய்யுங்கள். மொச்சை சுண்டலை மற்றவர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். பார்வையற்ற ஏழைகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை வெளிச்சமாகும்.

சனி தோஷம்: நவகிரகங்களில் சனிபகவானின் பெயரைக் கேட்டதும் பயப்படுவதுபோல் மற்ற கிரகங்களை நினைத்து யாரும் அஞ்சுவதில்லை என்றே சொல்லலாம். அதற்குக் காரணம் சனிபகவானின் ஆட்சிக் காலத்தில் அவர் கடுமையான சோதனைகளுக்கு ஆளாக்கிவிடுவார் என்பதுதான். சகல கிரகங்களையும் கட்டுப்படுத்தும் வல்லமை மிக்கவரான ஈஸ்வரனையே அவர் பிடித்தார் என்கிறது புராணம். இந்தப் புராணக் காரணங்களைவிட ஜோதிடத்தை முழுமையாக அறியாத பலரும், சனி பகவானைப்பற்றிய தவறான விஷயங்களைச் சொல்லி எல்லோரையும் ஒருவித அச்சத்துக்கு ஆளாக்கி இருப்பதுதான் முக்கியமான காரணம்.

சனியைப்போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள். ஒருவரது முன்வினைப் பாவத்தால் வரக்கூடிய தீமைகளே நற்பலன்களை அடைவதற்கு தடையாக இருக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆதிசங்கர மகானின் சரித்திரத்தில் கூட ஏழைப் பெண்ணுக்கு அவர் உதவுதற்காக மகாலட்சுமியை வேண்டியபோது அந்தப் பெண்ணுக்கு பூர்வஜன்ம தோஷம் தொடர்வதாகவும், அதனால் அவள் செல்வம் பெறுவதில் தடை உள்ளது என்றும் சொன்னாள் அன்னை மகாலட்சுமி அன்போடு அதனை நீக்கும்படி சங்கரமகான் வேண்டியதை அடுத்தே திருமகள் அந்தத் தீவினையைப் போக்கி, தனது பார்வையால் தங்க நெல்லியை மழையாகப் பெய்வித்தாள்.

அதனால் ஒருவரது முன்வினையால் ஏற்பட வேண்டிய பல சங்கடங்களை குறுகிய காலத்தில் அனுபவிக்க வைத்து, அந்த தோஷத்தை முழுமையாகப் போக்கி, சகல நன்மைகளும் கிடைப்பதற்கு அருளக்கூடியவர் சனிபகவான் என்பேத உண்மை. ஒரே ராசியில் நீண்டகாலம் இருக்கக்கூடிய கிரகம் இவர்.

சோம்பல், பணிகளில் தடை, முன்னேற்றத்தில் முடக்கம், இனம்புரியாத பயம், உடல் உறுப்புகளில் காயம், தொடர்ச்சியாக விபத்துகள், குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்க நேருதல், உடல்நலத்தில் அடிக்கடி உபாதை, அஜீரணம், மலச்சிக்கல், இரும்புப் பொருட்களால் காயம், மின்சாரம், நெருப்பு சார்ந்த பணிகளில் சங்கடம், எதிர்பாராத தீக்காயம், வழக்குகளில் இழுபறி, செய்யும் தொழிலில் தொடர் நஷ்டம், அயல்நாட்டு வர்த்தகத்தில் சிக்கல், சட்டப் பிரச்னைகளில் சிக்குதல், அடிமைத் தொழில் செய்தல், பிறருக்கு வாக்குத் தந்து சங்கடத்தில் சிக்குதல் இதுபோன்ற பிரச்னைகள் உங்கள் வாழ்க்கையில் அடிக்கடி நேர்ந்தால் உங்களுக்கு சனிதோஷம் இருக்கலாம்.

பொதுவாக சனிபகவான் நல்ல அனுபங்களைத் தந்து, அதன் மூலம் வாழ்க்கைப் பாடத்தினைக் கற்கவைப்பவர். அதோடு முன்பே சொன்னதுபோல் தீவினைகளை முழுமையாகப் போக்கி நல்வினைகளை அனுபவித்திடும் வாய்பினையும் அளிப்பவர். அவரது தோஷத்தின் வீரியத்தை மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்பதுதான் உண்மை. எனவே, சனி தோஷத்தை போக்குவதாக யாராவது பெரிய பரிகாரங்கள் சொன்னால் அதனை நம்பி ஏற்பதும், பின்னர் அவஸ்தை தொடரும்போது வருந்துவதும் வேண்டாம். அதைவிட சனி தோஷத்தின் கடுமையை அதாவது கடுமையான வெயிலில் நடப்பவருக்கு குளிர்க்கண்ணாடி தொப்பி, குடை போன்றவை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க உதவுவதுபோல சனிபகவானால் ஏற்படும் சங்கடங்களின் கடுமையை தவிர்க்கவே பரிகாரங்கள் உண்டு.

சனிபகவானுக்கு தோத்திரப்பிரியர் என்று ஒரு பெயர் உண்டு. அதாவது அவரது நாமாவளிகள், சனிபகவான் காயத்ரி போன்ற துதிகளைச் சொல்லி வணங்குவதே அவருக்கு மிகவும் பிடித்தமானதும் எளியதுமான பரிகாரம். அடுத்ததாக சனிபகவானுக்கு சந்தோஷம் தருவது, ஏழை மாற்றுத் திறானிகளுக்கு உதவுவது, காகத்துக்கு அன்னம் வைப்பது, நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது, எள் சாதம், எள் உருண்டை போன்றவற்றை பிறருக்குக் கொடுப்பது இவையெல்லாம் சனிபகவானுக்குரிய எளிய பரிகாரங்கள்.

சனிபகவான் பொங்கு சனியாகக் காட்சிதரும் திருக்கொள்ளிக்காடு திருத்தலம் சென்று வணங்குவதும், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து ஆராதிப்பதும் சிறந்தது. ஒன்பது அகல் விளக்குகளில் ஒன்பது நாணயங்களைப் போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி தீபமாக ஏற்றி வைத்து வணங்கிவருவது நல்ல பலன் தரும். இங்கே சனிபகவான் பொங்கு சனியாக இருப்பதால் இவரது பிரசாதங்களைப் பெறலாம். விபூதியை இங்கிருந்து பெற்றுவந்து தினமும் இட்டுக் கொள்ளலாம். திருநள்ளாறு தலத்தில் சனிகிரகத்தின் ஆதிக்கம் அதிகம் இருப்பதை விண்வெளி ஆய்வு மையமான நாசாவே ஒப்புக்கொண்டிருக்கிறது. அந்தத் தலத்தில் சென்று நளதீர்த்தத்தில் நீராடிவிட்டு, அணிந்திருக்கும் உடையை யாருக்காவது தானமாகத் தந்துவிடுவதே நல்லது. பின்னர், அங்குள்ள முறைப்படி சனிபகவானை ஆராதியுங்கள். அதற்கு முன் தர்ப்பாரண்யேஸ்வரரையும் அம்பிகையையும் நெய்தீபம் ஏற்றி வைத்து வணங்குவது முக்கியம். அங்கே இருந்து பிரசாதத்தை எடுத்துவருவது கூடாது.

சனிபகவானுக்கு உரிய அதிதேவதை ஐயப்பன். எனவே சபரிமலை செல்லும் ஏழை பக்தர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வது, ஐயப்பனை வணங்குவது எல்லாமே நற்பலன் தரும். சனிக்கிழமைகளில் கோவிந்த நாமாவளி சொல்வது, பெருமாள் திருக்கோயில்களுக்குச் சென்று அங்கே நடக்கும் அன்னதானத்தில் இயன்ற கைங்கரியம் செய்வது போன்றவை சனியின் தாக்கத்தைக் குறைக்கும்.

தினமும் மூன்று முறை சனிபகவான் காயத்ரியைச் சொல்லுங்கள். சனிக்கிழமைகளில் அசைவம் தவிருங்கள். அன்றைய தினம் இரவில் அரிசி சேர்க்காத உணவை எடுத்துக் கொள்ளுங்கள். மாதம் ஒரு சனிக்கிழமையில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சுவாமி, அம்பாளை வணங்கிவிட்டு, வலம் வந்து எல்லா தெய்வங்களையும் கும்பிடுங்கள். நவகிரக சன்னதியில் சனிபகவானுக்கு இயன்றால் அர்ச்சனை செய்யுங்க. பின்னர், பிராகாரத்தில் அமர்ந்து கோளறு திருப்பதிகத்தினை மூன்று முறை சொல்லுங்கள். வசதியற்ற மாற்றுத்திறனாளிக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் நிறையும்.

ராகு, கேது தோஷம்: ராகு, கேது இரண்டும் ஒரே உருவாக இருந்த அசுரனின் இருகூறான உடல் பகுதிகள். அதனால் இரண்டில் எந்த கிரகத்தின் அமைப்பு சரியில்லாவிட்டாலும் அதனை சர்ப்ப தோஷம் என்றுதான் சொல்வார்கள். அதேசமயம் இந்த இரண்டு கிரகங்களுமே சம சப்தம ஸ்தானம் என்கிற ஒன்றுக்கு ஒன்று ஏழாம் இடத்தில்தான் எல்லோருடைய ஜாதகத்திலுமே இருக்கும். ராகுவோ அல்லது கேதுவோ ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு 3,4,6,10,11,12 ஆகிய இடங்களைத் தவிர வேறு இடங்களில் இருந்தால் அதனை சர்ப்ப தோஷம் என்று சொல்வது உண்டு. ஒருவரது ஜாதகத்தில் ராகு, கேதுக்களுக்கு இடையே காடிகாரச் சுற்றிற்கு எதிர்ச்சுற்றில் அதாவது இடமிருந்து வலமாக எல்லா கிரகங்களும் அடங்கி இருந்தால் அதனை காலசர்ப்ப தோஷம் என்றும், வலமிருந்து இடமாக கடிகாரச்சுற்றில் எல்லா கிரகங்களும் ராகு - கேதுக்களுக்கு  இடையே இருந்தால் அதனை காலசர்ப்ப யோகம் என்றும் குறிப்பிடுவார்கள்.

ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள். அதாவது நிழல் கிரகங்கள். அவற்றுக்கு நேரடியான காரகம் இல்லை என்றாலும் மற்ற கிரகங்களின் தாக்கத்தை இவர்களது அமைப்பு அதிகரிக்கச் செய்யும் என்பது ஜோதிட சாஸ்திர விதி. அதேசமயம் ராகுவை செவ்வாயுடனும் கேதுவை சனியுடனும் ஒப்பிட்டும் கூறுவது உண்டு. ராகுவின் அமைப்பில் தோஷம் இருந்தால், சட்டப்புறம்பான செயல்கள், நபர்களால் சங்கடங்கள், அரசினால் சங்கடம், அரசுவழி அனுமதிகளில் தடை, சகவாச தோஷம் உண்டாகுதல், கூடா நட்பினால் சங்கடம், உணவே நஞ்சாதல், மருந்துகளே கெடுதியாதல், விஷ ஜந்துக்களால் தொல்லை, பங்கு சந்தையில் அடுத்தடுத்து நஷ்டம், கூட்டுத் தொழிலில் வீணான சந்தேகம், அலர்ஜி, தம்பதியருக்குள் வீண் மனஸ்தாபங்கள், உடல்நலத்தில் கண்டுபிடிக்க முடியாத புதுப்புது நோய்கள், மனதில் இனம்புரியாத வெறுப்பு இவையெல்லாம் ஏற்படக்கூடும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

கேதுவின் அமைப்பில் தோஷம் இருப்பின் கவுரவக் குறைபாடு, தொழில் எதிர்பாராத நஷ்டங்கள், ஞாபக சக்தி குறைபாடு, பணியிடத்திலும் வெளியிடங்களிலும் வீண் பழி, கூட்டாளிகளுடன் மனவருத்தம், பிறமொழி மனிதர்களால் பிரச்னைகள், மேலிடத்தின் கோபத்துக்கு ஆளாதல், கல்வி, கலையில் நாட்டம் குறைதல், பக்தி மார்க்கத்தில் வெறுப்பு, பெரிய மனிதர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுதல், அக்கம் பக்கத்தில் செல்வாக்கு குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இரட்டை கிரகங்களான இந்த கிரகங்களின் அமைப்பில் ராகுவின் அமைப்பினால் தோஷம் உண்டாகி இருந்தால், துர்க்கையை ஆராதிப்பது மிகச் சிறப்பான பலன்தரும். காளி, மாரி, அங்காளம்மன் போன்ற தெய்வங்களை வணங்குவதும், புற்றுள்ள அம்மன் கோயில்களுக்குச் சென்று ஆராதிப்பதும் நல்லது. பட்டீஸ்வரம் துர்க்கை, மேட்டுப்பாளையம் வனதுர்கை, விஜயவாடா கனக துர்க்கை போன்ற பிரசித்திபெற்ற துர்க்கை தலங்களுக்குச் சென்று அரக்கு நிறப் புடைவை சாத்தி ஆராதிப்பது, குங்கும அர்ச்சனை செய்வது, 9 உதிரி எலுமிச்சைகள் தந்து வணங்குவது இவற்றில் அவரவரால் இயன்றதைச் செய்யலாம். திருநாகேஸ்வரம் சென்று ராகுவுக்கு உரிய ப்ரீதியினைச் செய்வதும் சிறப்பான நற்பலன் தரும்.

கேதுவின் அமைப்பில் தோஷம் இருப்பதாகத் தெரிந்தால் அல்லது கேது தோஷத்தினால் ஏற்படும் பிரச்னைகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக நீங்கள் செய்யவேண்டியது அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று வணங்குவதுதான். ஞானகாரகனாகிய கேதுவின் தோஷம் பெரும் பாதிப்பை ஏற்படுத்திடாமல் இருக்க, பிள்ளையார்பட்டி திருத்தலம் சென்று கற்பக கணபதியை மனதார வணங்கி வருவது சிறப்பான பலன்தரும். கீழ்ப்பெரும்பள்ளம் தலம் சென்று அங்கே கேதுவுக்கு உரிய பரிகாரங்களைச் செய்வதும் நல்லது.

ராகு, கேது இரு கிரகங்களின் தோஷமும் காளஹஸ்தி திருத்தலம் சென்று வணங்குவதாலும் தீரும். அங்கே சென்று இயன்ற அளவு பசுநெய்யினை சுவாமி, அம்பாள் சன்னதிகளில் தீபம் ஏற்றக் கொடுங்கள். எல்லா தெய்வங்களையும் கும்பிட்டுவிட்டு, மூன்றுமுறை கோயிலை வலம் வந்த பிறகு கொடிமரத்தின் அருகே நமஸ்காரம் செய்வது அவசியம். அதன்பிறகு பால்கலந்த இனிப்பினை உங்களால் முடிந்த அளவு வாங்கி பிறருக்கு விநியோகம் செய்யுங்கள். சிதம்பரத்தில் இருந்து இருபத்திரண்டு கிலோமீட்டர் தொலைவில் அனந்தீஸ்வரர் என்ற பெயரில் இறைவன் அருள்பாலிக்கும் தலம் இருக்கிறது. அங்கே சென்று ஆராதிப்பதும் சிறந்த பலன் தரும். ஆதிசேஷன் மேல் சயனத் திருக்கோலத்தில் அருளும் ரங்கநாதரை வேண்டிப் பிரார்த்திப்பதும் சர்ப்ப கிரக தோஷங்களைச் நீங்கச் செய்யும். திருப்பாம்புரம், செம்பாம்பின்குடி போன்ற நாகங்களின் பெயரில் உள்ள தலங்களில் அருளும் தெய்வங்களை வணங்குவது, அரசமரத்தின் கீழ் அமைந்துள்ள நாகர்களை வழிபடுவது போன்றவையும் சர்ப்ப கிரகங்களை சாந்திப்படுத்தும். ராகுவின் தோஷம் உள்ளோர், செவ்வாய்க்கிழமைகளில் அசைவம் தவிருங்கள். அன்று இரவு அரிசி சேர்க்காத உணவை எடுத்துக் கொள்ளுங்கள். மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் புற்றுள்ள அம்மன் கோயிலுக்கோ அல்லது துர்க்கை சன்னதிக்கோ சென்று குங்கும அர்ச்சனை செய்து ஆராதியுங்கள். ஏழை நோயாளிகளின் மருத்துவத்துக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை ரம்யமாகும்.

கேதுவின் அமைப்பில் குறைபாடு உள்ளோர், ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவம் தவிருங்கள். அன்று இரவு அரிசி இல்லாத உணவை எடுத்துக் கொள்ளுங்கள். மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரத்தில் பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று அறுகு சாத்தி, ஆனைமுகனை ஆராதியுங்கள். ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள். உங்கள் வாழ்வில் ஆனந்தம் நிறையும்.

 
மேலும் துளிகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar