பதிவு செய்த நாள்
25
நவ
2016
11:11
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில கிராமம் ஒன்றில், இந்துக்கள் கோவில் கட்டுவதற்கு, முஸ்லிம்கள் இலவசமாக நிலம் வழங்கினர். ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, சிகார் மாவட்டத்தில், கோலிடா என்ற கிராமத்தில், இந்துக்களும், முஸ்லிம்களும், பல ஆண்டுகளாக ஒற்றுமையாக வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் இந்துக்கள், சுரஜல் மாதாவுக்கு சிறிய கோவில் கட்டி வழிபட்டு வந்தனர். மிக சிறிதாக இருந்த, அந்த கோவிலை விரிவுபடுத்தி, பெரிதாக கட்ட திட்டமிட்டனர்.
தானம் : ஆனால், கோவிலை சுற்றி இருந்த நிலம், இடுகாடு அமைப்பதற்காக, முஸ்லிம்கள் வாங்கி வைத்திருந்தனர். இந்த தகவல் தெரிந்ததும், அப்பகுதி முஸ்லிம் மக்கள் கூடி, இதுபற்றி விவாதித்தனர்; கோவிலுக்கு தேவைப்படும் நிலத்தை, விற்பனை செய்யாமல், தானமாக வழங்குவது என முடிவு செய்தனர். அதன்படி, அந்த நிலம், கோவில் கமிட்டிக்கு, சட்டப்படி தானமாக வழங்கப்பட்டது.
பிரமாண்ட கோவில் : இதை தொடர்ந்து, அந்த இடத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில், இந்துக்கள் பிரம்மாண்ட கோவிலை கட்டியுள்ளனர்; அதன் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. இதில், நிலத்தை தானமாக வழங்கிய, முஸ்லிம் சமூக மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
தாமாக முன் வந்து.. இதுகுறித்து அந்த கிராமத்தின் முன்னாள் தலைவர் சிவபால் சிங் கூறியதாவது: எங்கள் கிராமத்தில், இந்துக்கள் - முஸ்லிம்கள் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு நிலம் தேவை என அவர்களிடம் கேட்கவில்லை. அதற்குள்ளாகவே, எங்கள் தேவையை அறிந்து, முஸ்லிம்கள் முன் வந்து, நிலத்தை தானமாக வழங்கினர். இதன் மூலம் எங்கள் கிராமத்தில் மத நல்லிணக்கம் மேலும் வலுப்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.