பதிவு செய்த நாள்
25
நவ
2016
12:11
திருவண்ணாமலை: ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு, பஸ்களை இலவசமாக இயக்க வேண்டும் என, இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமையில், திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், பக்தர்கள் சிரமப்படுவதை தடுக்கும் வகையில், அனைத்து பகுதிகளில் இருந்தும், தீப திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் வர வசதியாக, இலவச பஸ்களை இயக்க வேண்டும். கோவிலில் கட்டணத்திற்கு விற்கப்படும் புளியோதரை, சர்க்கரை பொங்கல், தீப மை பிரசாதம் ஆகியவற்றை பக்தர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழாவிற்கு வரும் பக்தர்களிடம், கட்டணமில்லா இலவச தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும். திருப்பதி தேவஸ்தானம் போல், இலவச மினி பஸ்களை இயக்கி, பவுர்ணமி, தீபதிருநாள் தவிர மற்ற தினங்களில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் கிரிவலம் செல்ல வசதி செய்து தர வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.