பதிவு செய்த நாள்
25
நவ
2016
06:11
சபரிமலை: சபரிமலையில் அடுத்த வாரம் முதல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று சபரிமலை போலீஸ் தனி அதிகாரி ரமேஷ்குமார் கூறினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்தி, 18-ம் படி வழியாக ஏற்றி, தரிசனம் முடித்து, அவர்களை பம்பைக்கு பத்திரமாக அனுப்பி வைப்பதுதான் போலீசின் முக்கிய பணி. ஒரு ஏ.டி.ஜி.பி., இரண்டு ஐ.ஜி.க்கள், ஒரு டி.ஐ.ஜி. மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மரக்கூட்டம், சரங்குத்தி, யூவளைவு, நடைப்பந்தல், 18-ம் படி, சோபானம், கொடிமரம், மாளிகைப்புறம் உட்பட பத்து பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் பத்து டி.எஸ்.பி.க்கள் கண்காணிக்கின்றனர்.
ஸ்ரீகோயில் பாதகாப்புக்கு கேரள போலீசின் சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோக்களும் , மத்திய அதிவிரைவு படை வீரர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டாலும் அதை எதிர் கொள்ளும் வகையில் பத்து பேர் நவீன துப்பாக்கிகளுடன் சன்னிதானத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பில் பம்பையும், மரக்கூட்டமும் முக்கிய இடங்களாக கண்டறியப்பட்டு இங்கு கூடுதல் ஸ்கேனிங் கருவிகள் அமைக்கப்பட உள்ளது. சன்னிதானம் முதல் மரக்கூட்டம் வரை 22 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இது செயல்பட தொடங்கும் போது கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.