பதிவு செய்த நாள்
28
நவ
2016
10:11
சபரிமலை: எருமேலியில் இருந்து, பெருவழி பாதை வழியாக பம்பை செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாலை, 5:00 மணிக்கு பின், எருமேலியில் இருந்து இந்த பாதையில் செல்ல முடியாது. எருமேலியில் இருந்து கரிமலை, அழுதை வழியாக செல்லும் பெருவழி பாதை, பாரம்பரிய பாதை ஆகும். மகிஷியை வதம் செய்த பின், அய்யப்பன், இந்த பாதை வழியாகவே சபரிமலை சென்றார் என்று ஐதீகம். பொதுவாக, மகரவிளக்கு சீசனில் தான் அதிக அளவில் இந்த பாதையில் பக்தர்கள் வருவது வழக்கம். ஆனால், தற்போது மண்டல சீசன் துவங்கிய நாள் முதலே, பக்தர்கள் இந்த பாதையில் வருகின்றனர்.
அன்னதானம்: இதனால், பக்தர்களுக்காக ஐயப்பா சேவா சங்கம், கரிமலையில் முகாம் அலுவலகம் திறந்துள்ளது. இங்கு பக்தர்களுக்கு அன்னதானமும், சுக்குநீரும் வழங்குகிறது. இந்த பாதையில் கோயிக்கல் காவு, கரிமலை, அழுதை, காளைகட்டி ஆகிய இடங்களில் பக்தர்கள் தங்க வசதி செய்யப்பட்டுள்ளது. யானை மற்றும் காட்டு எருமை போன்ற விலங்குகள் நடமாட்டம் உள்ளதால், தற்போது மாலை, 5:00 மணிக்கு பின், பக்தர்கள் இந்த பாதையில் செல்ல அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எருமேலி சாஸ்தா கோவிலில் நெய்யபிஷேகத்துக்கான டிக்கெட் கிடைக்கும். எருமேலி தனலெட்சுமி வங்கியில், அப்பம், அரவணைக்கான கூப்பன் கிடைக்கும். ஒருவர் கைதுசபரிமலையில் அன்னதானம், வழிபாடுகள், பூஜைகள் நடத்தி தருவதாக, பேனர் கட்டி பணம் வசூலிக்க முயன்றதாக, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அச்சிராஜு, 62, என்பவரை சன்னிதானம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
24 மணி நேர தகவல் மையம்: சபரிமலை வரும் பக்தர்களின் வசதிக்காக, தேவசம் போர்டின் தகவல் மையம், சன்னிதானம் பெரிய நடைப்பந்தலில் செயல்படுகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி என, ஆறு மொழிகளிலும் பக்தர்களுக்கு உதவ, ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த மையத்தின் போன் எண், 04735 - 202048. இந்த எண்ணில் தொடர்பு கொண்டால், சபரிமலையில் நடை திறந்து, அடைக்கும் நேரம், பூஜைகள் மற்றும் அதன் கட்டணங்கள், கூட்ட நிலைமை, கால நிலை போன்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம். 24 மணி நேரமும் இந்த மையம் செயல்படுகிறது.