சபரிமலை தூய்மைப் பணியில் மத்திய அதிவிரைவு படையினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2016 11:11
சபரிமலை: சபரிமலையில் பாதுகாப்பு பணியுடன், சுத்தம் செய்வதிலும் மத்திய அதிவிரைவு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். சபரிமலையில் குவியும் குப்பையை அகற்ற பத்தணந்திட்டை கலெக்டர் தலைமையில் சபரிமலை சானிட்டேஷன் சொசைட்டி உருவாக்கப்பட்டு, துப்புரவு பணி நடந்து வருகிறது. மேலும் கேரள போலீஸ்துறை சார்பில் புண்ணியம் பூங்காவனம் என்ற திட்டத்தில் காலை எட்டு மணிக்கு போலீசார், தேவசம்போர்டு ஊழியர்கள் இணைந்து குப்பையை அப்புறப்படுத்துகின்றனர். தற்போது மத்திய அதிவிரைவுப்படையினர் பாதுகாப்பு பணியுடன் இந்த திட்டத்தில் தீவிரமாக இணைந்து பணியாற்றுகின்றனர். இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை தோறும் கோவை பட்டாலியனை சேர்ந்த 100 வீரர்கள் சன்னிதானம் வந்து ஞாயிறு இரவு ௩:00 மணி முதல் 4:00 மணி நேரம் துப்புரவு பணிகளை செய்கின்றனர். இந்த புதிய முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் சன்னிதானத்தின் முன்புறம் உள்ள கொப்பரை மைதானம், பின் பக்கம் உள்ள பெய்லி பாலம், பாண்டித்தாவளம் ஆகிய இடங்களை சுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக துணை கமாண்டர் மது ஜி நாயர் கூறினார்.