பம்பையில் சோப்பு போட்டு குளிக்காதீங்க... கம்பி எண்ணணும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2016 05:11
திருவனந்தபுரம் : சபரிமலை பம்பை நதியில் பக்தர்கள் சோப்பு போட்டு குளித்தால் தண்டனை விதிக்கப்படும் என்று பத்தனம்திட்டா கலெக்டர் கிரிஜா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் தற்போது மண்டல பூஜை நடந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்த பிறகு தான் அவர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடிகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் புல்மேடு பாதையும் திறக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் கூட்டம் காரணமாக கோயில் நடை கூடுதல் நேரம் திறக்கப்பட்டு, இரவு 11.45 மணிக்கு தான் கோயில் நடை அடைக்கப்படுகிறது. சபரிமலை வரும் பக்தர்கள் அங்குள்ள புண்ணிய நதியான பம்பையில் நீராடி விட்டுதான், செல்வார்கள். பம்பை நதி மாசுப்படுவதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நதியில் பக்தர்கள் ஆடைகளை விடக்கூடாது. சோப்பு, ஷாம்பு, எண்ணெய் தேய்த்து குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி பம்பை நதியில் சோப்பு பயன்படுத்தி குளித்தால் 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று பத்தனம்திட்டா கலெக்டர் கிரிஜா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.