சபரிமலை புல்மேடு பாதையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2016 11:12
சபரிமலை: பாதுகாப்பு காரணங்களுக்காக மதியம் 2:00 மணிக்கு பின் புல்மேடு வரும் பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வண்டிபெரியாறு, உப்புப்பாறை, சத்திரம், புல்மேடு வழியாக தமிழகம் மற்றும் கேரள பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். இந்த பாதையில் இயற்கை அழகை ரசிக்க முடியும். சில ஆண்டுகளுக்கு முன்னர் மகரவிளக்கு நாளில் நடைபெற்ற விபத்துக்கு பின்னர் இந்த பாதையில் அரசு நிர்வாகம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சத்திரத்துக்கு தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் பெரும்பாலான பக்தர்களும் கால்நடையாகவே வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாகும் போது கேரள அரசு போக்குவரத்துக்கழகம் சிறிய பஸ்களை இயக்குவது வழக்கம். புல்மேடு கடந்த பின்னர் பக்தர்கள் அடர்ந்த காடு வழியாக வரவேண்டும். இதனால் மதியத்துக்கு பின் வரும் பக்தர்கள் காட்டில் வழிமாறி காட்டுக்குள் சிக்கி சிரமப்பட வேண்டிவரும். மேலும் யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள் அதிக அளவில் நடமாட்டம் இருக்கும் பகுதியாகும். இதை கருத்தில் கொண்டு மதியம் 2:00 மணிக்கு பின் வரும் பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் சத்திரத்தில் தங்க வைக்கப்பட்டு அடுத்த நாள் காலையில் செல்ல அனுமதிக்கப்படுவர். இதற்காக புல்மேடு, சத்திரம் பகுதியில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பிளாஸ்டிக், பாலிதீன் தடை கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதால், பக்தர்களின் உடைமைகள் பரிசோதிக்கப்படுகிறது. குடிநீர் பாட்டில்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சத்திரத்தில் பக்தர்கள் பெயர், முகவரி பதிவு செய்யப்படுகிறது.