சபரிமலையில் படிபூஜை நடத்த இனி 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2016 05:12
சபரிமலை: சபரிமலையில் படிபூஜை நடத்த பக்தர்கள் இனி 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 2033 வரை முன்பதிவு முடிந்து விட்டது. சபரிமலையில் பக்தி பூர்வமானதும், அதிக செலவும் கொண்ட பூஜை படி பூஜை. 18 படிகளிலும் குடியமர்த்தப்பட்டுள்ள மலை தேவதைகளை திருப்தி படுத்தும் வகையில் இந்த பூஜை நடைபெறுகிறது.
அனைத்து படிகளிலும் பட்டு விரித்து அதில் தேங்காய், பூக்கள் வைக்கப்பட்டு, குத்து விளக்கேற்றி வைத்த பின்னர் தந்திரி ஒரு மணி நேரம் பூஜை நடத்துவார். தொடர்ந்து அனைத்து படிகளிலும் நிவேத்யம் நடைபெறும். இறுதியில் தீபாராதனை நடத்தி பூஜை நிறைவு பெறும். இது முடிந்ததும் தந்திரிகளும், பூஜாரிகளும் ஸ்ரீகோயிலுக்குள் செல்வர். உபயதாரர்கள் ஸ்ரீகோயில் பக்கத்தில் சென்று பிரசாதம் பெற்று செல்வர். படிபூஜைக்கு இந்த ஆண்டு முதல் தேவசம்போர்டு நிர்ணயித்துள்ள கட்டணம் 75 ஆயிரம் ரூபாய். சபரிமலையில் நடைபெறும் பூஜைகளில் அதிக கட்டணம் இதுவாகும். இதற்கான முன்பதிவு 2033-ம் ஆண்டு வரை முடிந்து விட்டது. இனி 2034-க்கு தான் முன்பதிவு செய்ய முடியும். மண்டல - மகரவிளக்கு காலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் 60 நாட்களில் படிபூஜை கிடையாது. மாத பூஜை காலத்தில் மட்டுமே இந்த பூஜை நடைபெறுகிறது. உதயாஸ்தமனபூஜையின் முன்பதிவு 2023-ம் ஆண்டு வரை நிறைவு பெற்றுள்ளது. இதற்கு தேவசம்போர்டு நிர்ணயித்துள்ள கட்டணம் 40 ஆயிரம் ரூபாய்.