கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு 108 சிறப்பு திரவிய அபிஷேகங்கள் நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு நேற்று சிறப்பு திரவிய அபிஷேகங்கள் நடந்தது. இதனையொட்டி அதிகாலை 5:00 மணிக்கு மகாகணபதி ஹோமத்துடன் துவங்கி, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. காலை 10:30 மணிக்கு 108 விசேஷ திரவியங்கள் மற்றும் 108 கனி வகைகள் கொண்டு கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி, ஐயப்ப பக்தர்களின் சரணகோஷங்களுடன் மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு சுவாமி கொலுவிருத்தலும், திருக்கோவிலுார் நாதஸ்வர கலைஞர்களின் இசைவிழாவும் நடந்தது. வைபவங்களை சிவாச்சாரியார் கார்த்திகேயன் குருக்கள் செய்து வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குமார் குருசாமி குழுவினர் செய்திருந்தனர்.