பக்தர்களுடன் வரும் பெண்கள் பம்பையில் குளிக்க வேண்டாம்: தேவசம்போர்டு வேண்டுகோள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2016 11:12
சபரிமலை, பக்தர்களுடன் பம்பை வரை வரும் பெண்கள் பம்பை நதியில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். சபரிமலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் பல்வேறு கோயில்களுக்கும் செல்வதால் அவர்களுடன் குடும்ப பெண்களும் வருகின்றனர். பம்பை வரும் இந்த பெண்கள் பம்பை ஆற்றில் குளிக்கின்றனர். இவ்வாறு குளிப்பது தவறாகும். விரதமிருந்து வரும் பக்தர்கள் குளிக்கும் இடத்தில் பெண்களும் குளிப்பது ஆசாரங்களுக்கு எதிரானது. எனவே பக்தர்களுடன் வரும் பெண்கள் இதை தவிர்க்க வேண்டும். தேவசம்போர்டில் நீண்ட காலமாக இருந்து வரும் நடைமுறைகளில் காலத்துக்கு ஏற்ற மாற்றம் செய்யப்படும். பொருட்கள் வாங்குவது, சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது போன்றவை தனித்தனி கமிட்டிகளில் ஒப்ப்படைப்பது பற்றி பரிசீலிக்கப்படும். இரண்டாயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் அன்னதான மண்டபத்தில் சாப்பிடும் பிளேட்டுகள் வெந்நீரில் கழுவப்பட்டாலும், நீராவி மூலம் கிருமிகள் இல்லாமல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். சபரிமலையில் பெண்கள் அனுமதி, அபிவிருத்தி பணிகள் ஆகிய இரண்டு விஷயங்களிலும் ஆசாரங்களுக்கு உட்பட்டு மட்டுமே முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.