எல்லோரும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை நன்கு அறிவர். அனைவரும் புரிந்து கொண்டு சொல்வதற்கு ஏற்ப அங்கங்கே உள்ள பகவானின் திருநாமங்கள் எனும் ரத்தினங்களைச் சேகரித்து மாலை தொடுத்தது போலவே தொடுக்கப்பட்டது ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம். சகஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு சகஸ்ரநாமத்தைதான் குறிக்கும் என்கிற அளவுக்குப் பெருமை உடையது. ஆதிசங்கர பகவத்பாதாள் காஷ்மீரில் யாத்திரை செய்து கொண்டிருந்த போது தம் சிஷ்யரை அழைத்து புஸ்தக பாண்டகாரத்திலிருந்து லலிதா ஸகஸ்ரநாமத்தை எடுத்து வரும்படி ஆக்ஞாபித்தார். அதற்கு பாஷ்யம் பண்ண வேண்டும் என்று ஆசை (திருவுள்ளம்). சிஷ்யர் எடுத்து வந்து கொடுத்ததைப் பார்த்தார்... அது விஷ்ணு ஸகஸ்ரநாமம்.
நான் இதைக் கேட்கலையே... நான் கேட்டது லலிதாஸகஸ்ரநாமம் அல்லவா...? நீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கொண்டு வந்திருக்கியே... என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார். திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சகஸ்ரநாமமாகவே இருந்தது! அப்போது ஆதிசங்கரர் சிஷ்யரைக் கேட்டார். நான் சொல்வது என்ன? நீ செய்வது என்ன...? சுவாமி, நான் என்ன செய்வேன். அங்கே போய் லலிதா சகஸ்ரநாமத்தை எடுக்கணும்னு கையை வைச்சா, ஒரு சின்னகன்யாப் பெண் வந்து நின்னுண்டு அதை வைச்சிடு; இதை எடுத்துண்டு போன்னு சொல்கிறாள். நான் என்ன செய்வேன்...? என்றார் சிஷ்யர்.
திகைத்துப்போன ஆதிசங்கரர் தம் திரு உள்ளத்திலே நினைத்தார். அந்த அம்பிகையே இங்கு பாலையாய் வந்து அந்த எம்பெருமான் நாராயணனுடைய திருநாமத்துக்கு பாஷ்யம் பண்ணும் படியாய் நம்மை நியமிக்கிறாள் என்று முடிவு செய்து. அதன்பிறகு விஷ்ணு சகஸ்ரநாமம் பாஷ்யம் பண்ணினார் பகவத்பாதர். இப்படி லலிதையே போற்றும்படியான லலிதமான சஹஸ்ரநாமம் எல்லாரும் கொண்டாடும்படியான ஏற்றம் உடையது. எல்லா சஹஸ்ரநாமங்களுக்கும் ஆதியான சஹஸ்ரநாமம் இது தான். ஆகையினாலே சகஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு ஸகஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும்.
ஆயிரம் திருநாமங்களுக்கு என்ன ஏற்றம்? அந்த சகஸ்ரநாமம் சொல்லப்பட்டது யாராலே...? ஞானியருள் முதல்வரான பீஷ்மரால் சொல்லப்பட்டது. பீஷ்மர் என்றாலே பயப்படத்தக்கவர் என்று அர்த்தம். அம்புப் படுக்கையில் இருந்தார் பீஷ்மர். அந்தக் காட்சியைப் பார்க்க தர்மபுத்திரரை அழைத்துச் சென்றார் பகவான் கிருஷ்ணர். அணையும் நெருப்பைப் போல் இருக்கிறார் பீஷ்மர். அவர் போனால் தர்மத்தைச் சொல்ல யார் இருக்கிறார்கள்...? போ, அவர் சொல்வதைப் போய் கேள் என்று தர்மபுத்திரரை அனுப்பினார். ஏன் பீஷ்மர் போய் விட்டால் பகவானே இருக்கிறாரே தர்மத்தைச் சொல்ல.... என்று நமக்குக் கேட்கத் தோன்றும். பகவான் இருந்தால் மட்டும் போதாது. அவரை விளங்கச் செய்யக்கூடிய மகான்கள் இருக்கணும்! இந்த உண்மைக்கு சாட்சியமாகத் தான் பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன அந்த விஷ்ணுசகஸ்ர நாமத்தைக் கேட்டார், பல பேர் கேட்டார்கள். அந்த வாசுதேவன் சொன்னது கீதை; அவன் கேட்பது சகஸ்ரநாமம். இப்படி அவன் ஆனந்தமாய்க் கேட்டதே அவன் பெருமை, உயர்வு. பராசரப்பட்டர் விஷ்ணு சகஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் செய்திருக்கிறார். பகவத் குண தர்ப்பணம் என்று அதற்குப் பெயர், பகவானுடைய திருக்கல்யாண குணங்களைக் காட்டக்கூடிய கண்ணாடி என்று பொருள்.
விஷ்ணு சகஸ்ரநாமம் என்னும்போது பகவானுடைய நாமாக்களைச் சொல்கிறோமா? அவன் குணங்களைச் சொல்கிறோமா? அவன் குணங்களைச் சொல்கிறோமா என்ற குழப்பம் வேண்டாம். அவன் குணங்களையே தெரிவிக்கும் நாமாக்கள் அவை. அத்தனையும் சுகுணங்கள். சிறிய கண்ணாடியானது மிகப்பெரிய யானையின் உருவத்தைக் கூட காட்டவல்லது இல்லையா...? அதைப் போலவே சர்வ வியாபகவானை அந்தச் சின்னத் திருநாமங்கள் நமக்குப் படம் பிடித்துக்காட்டுகின்றன.
பகவத் குண தர்ப்பணம் என்கிற பாஷ்யத்திலே பராசரப்பட்டர் விஷ்ணு சகஸ்ர நாமத்துக்குரிய ஏற்றங்களைச் சொல்கிறார் - நித்யம் பகவத் சன்னதியில் (சன்னிதியில்) விளக்கேற்றி, சஹஸ்ர நாமம் பாராயணம் செய்யும் வழக்கம் வைத்துக் கொண்டால் அந்தக் குடும்பத்திலே சண்டை, கலகம் இருக்காது. சர்வ சம்பத்தும் வந்து சேரும். அந்நியோன்யம் வளரும். துர்தேவதைகள் பிரவேசிக்காது. நம் சித்தத்திலும் நுழையாது. கீதைக்குச் சமானமாக ஏதாவது உலகத்திலே உண்டா? என்று கேட்டால் அது விஷ்ணு சஹஸ்ரநாமம்தான்.
இன்னும் கேட்டால் கீதையை விட உயர்வானது. கீதையைச் சொன்னது பகவான். அந்தப் பகவத் சரணார விந்தத்திலே அஞ்சலமான பக்தி உடைய ஞானி (பீஷ்மர்) சொன்னது விஷ்ணு சகஸ்ரநாமம். பகவானைக் காட்டிலும் ஞானி உயர்ந்தவரானதாலே அவர் வார்த்தைக்கு மதிப்பு அதிகம். வேதமே சொல்கிறது. யக்ஞமே பண்ண வேண்டாம். அவன் திருநாமத்தைச் சொன்னாலே போதும். யக்ஞம் பண்ணின பலன் கிடைக்கும். நாராயண! நாராயண! நாராயணா!