பதிவு செய்த நாள்
02
டிச
2016
04:12
ஓம் நமோ நாராயணாய. இதில் ஓம் என்பது ஓர் எழுத்தாகவும், அதனைத் தொடர்ந்து வருகின்ற நமோ நாராயணாய என்ற சொற்களின் எழுத்துக்களைக் கூட்டினால் எட்டெழுத்து மந்திரம் தோன்றும். ஓம் என்பது மூல மந்திரம். இது அகார, உகார, மகாரத்தின் சேர்க்கையில் தோன்றியதாகும். இதன் அடிப்படையில் அ, உ, ம் ஆகியவற்றின் கூட்டெழுத்தே ஓம் எனும் பிரணவமாகும். இதில் அகாரம் என்பது இறைவனையும் உகாரம் என்பது உயிரானது ஈசுவரனைத் தவிர்த்து மற்றவற்றிற்கு உரியது அன்று எனும் பொருளையும் (க்ஷேசத்துவம் - ஈசுவரனுக்கு அடிமையாய் இருத்தல்), மகாரம் என்பது ஞானவானாகிய சீவனையும் குறிக்கின்றன. மகாரமாகக் குறிக்கப்படும் சீவனுக்கு அறிவும் சுதந்திரமும் உள்ளது. இதனால் ஓம் என்பது ஞானவானாகிய உயிர்கள் யாவும் இறைவனுக்கு மட்டுமே அடிமை எனும் தத்துவத்தைப் பிரணவ மந்திரம் சுட்டுகின்றது. இந்தப் பிரணவ மந்திரத்தைச் சகல வேத சாரம் என்றும் வைணவர்கள் சிறப்பித்துக் கூறுவர். கீதையில் கண்ணன், எழுத்துக்களின் நான் அகரமாக இருக்கிறேன் என்கிறார். எல்லா ஓசைகளுக்கும் அகரம் அடிப்படைக் காரணமாக இருக்கின்றது என்பது யாவரும் அறிந்த ஒன்றே, அகரம், நாராயண எனும் பதிதத்தின் சுறுக்கம் என்பதால் அது எல்லா உலகையும் காப்பது என்ற பொருளிலும் வைணவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
நமோ எனும் ஈரெழுத்தில் மகாரம் உயிரையும், ந எனும் எழுத்து இல்லை என்றும் பொருள் தருகின்றது. இக்குறிப்பின் அடிப்படையில் உயிரானது தானும் தனக்கு உரிமை உடையவர் அல்ல, பிற பொருளும் தனக்கு உரிமை உடையது அல்ல என்பதனால் அவ்வுயிர் பிறனுக்கு அதாவது ஈசுவரனுக்கே உரியது என்பது பொருளாகின்றது. எனவே நம என்பது பகவானுக்கே வசப்பட்டிருத்தல் எனப்படும். நாராயணாய எனும் சொல்லோ நார, அயன, ஆய எனும் மூன்று சொற்களின் கூட்டுத் தொகுதியாக அமைந்துள்ளது. நார எனும் சொல் நரனிடம் இருந்து தோன்றிய உயிர்களைக் குறிக்கின்றது; அயன எனும் சொல் உபாயம், பலன், ஆதாரம் எனும் பொருள்களைத் தருகின்றது. இதன் அடிப்படையில் நாரயணன் எனும் சொல்,
1. உயிர்களுக்கு ஆதாரமாகவும், அவை உய்வதற்கான உபாயமாகவும், அவை அடைய வேண்டிய பலனாகவும் விளங்குகிறது என்றும்;
2. உயிர்களை வசிப்பிடமாக உடையது (சித்தில் வாழ்வது) என்றும் பொருள் கூறுவதை உணர முடிகின்றது. இதன் அடிப்படையில் நாராயணன் என்பது ஆதிபரம் பொருளாகிய ஈச்வரனுக்குள் உலகம் உள்ளது. உலகம் யாவிலும் அவன் உள்ளான் எனும் பொருளை உணர்த்துகிறது.
அய என்ற சொல், கைங்கர்யத்தைக் குறிக்கின்றது. உயிர்கள் என்றென்றும் இறைப்பணிக்கே உரியவை எனும் தத்துவத்தைக் குறிக்கின்றது. உயிர்கள் இறைத் தொண்டு செய்யும்போது பரம்பொருளின் திருமுகம் மலர்கின்றது. இந்த மலர்ச்சியானது உயிர்களுக்குப் பலத்தைச் சேர்க்கின்றது. இதன் அடிப்படையில் ஓம் நமோ நாராயணாய எனும் மகாமந்திரம், உயிர்கள் யாவும் இறைவனுக்கே அடிமை பூண்டவை என்பதால் உயிரானது பற்றற்ற நிலையில் சரணாகதித் தத்துவத்தை அனுசரித்து, காண்பனயாவற்றிலும் அவனையேக் கண்டு நினைத்து அவனுள்ளே எல்லாம் உள்ளது எனும் தெளிவு நிலையில் இறைவனின் திருத்தொண்டில் தம்மை ஆழ்த்திக் கொண்டிட, உய்வு பெறும் எனும் மாபெரும் சத்தியத்தை உணர்த்துகிறது. இந்தப் பேருண்மைகளை யாவருக்கும் விரித்துரைக்கும் வண்ணமாகவே வைணவப் பிரமாண நூல்கள் யாவும் எழுந்துள்ளன.