நாயகன் என்றாலே முன்னின்று நடத்தி வைப்பவன். அனைவருக்கும் தலைவன் என்பது பொருள். தமிழில் வி என்றால் தனித்தன்மை என்று பொருள். விநாயகன் என்று உச்சரிக்கும்போது தலைவருக்கெல்லாம் தலைவன் என்றாகிறது. இவருக்கு நிகராகவோ, இவருக்கு மேலோ வேறு தலைவர் இல்லை. இதனால் இவர் முழுமுதற்கடவுள். விநாயகரின் இன்னொரு பெயர் கணபதி. இந்த கணபதியின் பெயரிலேயே அமைந்ததுதான் கணபதி முத்திரை. எப்படிச் செய்வது?
நின்ற நிலையில் நெஞ்சுக்கு நேராக கைகளை வைக்கவும். இடது கை உள்ளங்கையை வெளிப்புறம் பார்க்கும்படியும், வலது உள்ளங்கையை உட்புறம் பார்க்கும்படியும் வைத்து இரண்டு கை விரல்களையும் கொக்கி போல் கோத்து இழுத்துப் பிடிக்கவும். கைகளை இழுத்துப் பிடிக்கும்போது மூச்சை வெளிவிடவும். கைகளை இலகுவாக வைக்கும்போது மூச்சை உள்ளிழுக்கவும் இதேபோல் 6 முறை செய்யலாம். பின்னர் வலது கை உள்ளங்கையை வெளிப்புறம் பார்க்கும்படியும், இடது கை உட்புறம் பார்க்கும்படியும் வைத்து 6 முறை செய்யவேண்டும்.
பலன்கள்: கணபதி என்பதன் விளக்கம் காண் அப் பதி என்பது காகபுஜண்டரின் வாக்கு. அந்த பதி என்ற பரம்பொருளைக் காண முயல்வதே மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் முதல்கடமை. ஆனால், அதற்கு ஏற்படும் தடைகளோ ஏராளம், அந்தத் தடைகளைக் கடக்க உதவுவதே கணபதி முத்திரை. நெருக்கடியான சூழல்களில், இரண்டு பக்க நியாயதர்மங்களை பார்த்து பாரபட்சமில்லாமல் முடிவெடுக்க வேண்டிய இக்கட்டான நிலைகளில் இம்முத்திரை செய்தபின் முடிவெடுக்கலாம். இரண்டு கைகளையும் மாற்றி மாற்றி செய்வதால் இருதரப்பினரின் நன்மை தீமைகளை தெளிவாக அறியலாம்.
பாசமிகு உறவுகள் சார்ந்த பிரச்னைகள், குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள், குழந்தைகளின் ஒற்றுமையின்மை ஆகிய பிரச்னைக்கு குடும்பத் தலைவர், கணபதி முத்திரையை செய்து வரலாம். இம்முத்திரை செய்யும்போது (வலது சுவாசம்) சூரிய கலையும் (இடது சுவாசம்) சந்திரகலையும் மாறி மாறி ஓடுவதால் நமது மூளையின் வலது இடது பாகங்கள் சக்தி பெறுகின்றன. தன்னம்பிக்கை வளரும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். அனாகத சக்கரம் இயக்கப்படுவதால் உணர்வுகள் கட்டுக்குள் வருகின்றன. கர்மவினை அறுபட்டுப் போகும். தோள்பட்டையும் இதயமும் வலுவாகின்றன. படபடப்பு குறைகிறது. ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சுத் திணறல் குறைகிறது. மெய்யும் பொய்யும் இரண்டறக் கலந்துள்ள இந்த உலகில், ஆன்மிகப் பாதையில் மெய்யைப் பிரித்து அறிய இந்த கணபதி முத்திரை உதவும்.