பதிவு செய்த நாள்
02
டிச
2016
04:12
அக்காலத்தில் மாலியவான், சுமாலி, மாலி ஆகிய அரக்கர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். அரக்கர்களின் கொடுமை தாங்கமாட்டாத தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். விஷ்ணு அரக்கர்குலத்தை சம்ஹாரம் செய்தார். விஷ்ணுவிடம் இருந்து தப்பிய அரக்கர் தலைவர்கள் மூவரும் நாடு நகரம் இழந்து பாதாளத்துக்குள் சென்று மறைந்து வாழ்ந்தனர். அவர்களின் தலைவன் சுமாலி. தங்கள் குலம் இப்படி மறைந்து வாழ்வது அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதேநேரத்தில் செல்வச் செழிப்பு மிகுந்த இலங்கையை குபேரன் ஆட்சி செய்து வந்தது அவன் கண்களை உறுத்தியது. குபேரன் விச்ரவசு முனிவரின் மகன் என்பதை அறிந்துகொண்ட சுமாலி. அவர் மூலமாகத் தங்கள் குலம் விளங்க பிள்ளை பிறந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான்.
தன் மகள் கேகசியை அழைத்த சுமாலி, நம் வம்சம் உன்னால்தான் விளங்கவேண்டும். அதற்கு ஒரே வழி நீ விச்ரவசுவை திருமணம் செய்துகொண்டு, அவர் மூலமாக குபேரனைப் போன்ற பிள்ளைகளைப் பெறவேண்டும். அப்போதுதான் நம் குலம் விளங்கும் என்றான். சுமாலி சொன்னதைக் கேட்ட கேகசி, தந்தையே, அவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர். அப்படி இருக்க அவர் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பாரா? என்று கேட்டாள். அவரைச் சம்மதிக்க வைப்பது உன்னுடைய பொறுப்பு. எப்படியாவது நீ இதைச் செய்துதான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தினான் சுமாலி. தந்தையின் விருப்பம் நியாயமானதுதான் என்பதால், கேகசியும் அதற்குச் சம்மதித்தாள். ஒரு மாலைப் பொழுதில் கேகசி அழகிய பெண்ணாக மாறி விச்ரவசுவின் ஆசிரமத்துக்குச் சென்றாள். விச்ரவசுவை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தாள். நமஸ்கரித்த பெண்ணுக்கு ஆசி வழங்குவதுதான் முறை என்பதால், விச்ரவசுவும் பெண்ணே, உன்னுடைய விருப்பங்கள் எல்லாம் நிறைவேறி, சகல, சவுபாக்கியங்களையும் பெற்று வாழ்வாயாக என்று ஆசிர்வதித்தார்.
கேகசி, நான் தங்களைத் திருமணம் செய்துகொண்டு, தங்கள் மூலமாகப் பிள்ளைகளைப் பெறவேண்டும் என்பதுதான் என விருப்பம். தாங்கள் உடனே என்னை காந்தர்வ விவாகம் செய்துகொள்ளவேண்டும் என்று கூறினாள். பெண்ணே, உன் விருப்பம் நிறைவேறட்டும் என்று நான் கொடுத்த வரத்தை மீற முடியாது. அவசியம் உன்னை நான் திருமணம் செய்துகொள்கிறேன். இரவு வரை பொறுத்திரு. இப்போது நடந்தால் பிறக்கும் பிள்ளைகள் அரக்க குணத்துடன் இருப்பார்கள் என்றார். கேகசியோ இரவுவரை காத்திருந்தால் எங்கே விச்ரவசு மனம் மாறிவிடுவாரோ என்று பயந்து, அப்போதே அவர் தன்னை காந்தர்வ மணம் புரிந்துகொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினாள். வேறு வழி இல்லாமல் விச்ரவசுவும் சம்மதித்தார். அப்படி அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள்தான் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பணகை ஆகியோர். பெரும் வீரனான ராவணன் மிகச் சிறந்த சிவபக்தனும்கூட. தனக்கு முன் பிறந்த குபேரன் செல்வச் செழிப்புடன் இலங்கையை ஆண்டு வந்தது அவன் கண்களை உறுத்தியது. குபேரனுடன் போரிட்டு இலங்கையுடன் குபேரனின் செல்வங்களையும் பறித்துக்கொண்டான். ராவணனிடம் நாட்டையும் செல்வத்தையும் இழந்த குபேரன், சிவபெருமானைக் குறித்து தவம் இயற்றினான். குபேரனின் கடுமையான தவம் கண்டு இரங்கிய சிவபெருமான் தேவியுடன் தரிசனம் தந்தார். மறுபடியும் குபேரனை வடக்கு திசை பாலகனாக நியமித்து, மகாலக்ஷ்மியின் அருளால் குபேரனுக்கு நவநிதிகளும் கிடைக்கும்படியாக அருள்புரிந்தார்.