பதிவு செய்த நாள்
06
டிச
2016
12:12
சபரிமலை: பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலைக்கு திரு ஆபரணம் கொண்டு வரும் பாதையை, பக்தர்கள் வரும் பாதையாக மாற்றும் முயற்சி துவங்கிஉள்ளது. பந்தளம் அரண்மனையில் வளர்ந்து, சபரி மலையில் குடிகொண்ட அய்யப்பனை காண, ஆபரணங்களுடன் மன்னர் வந்ததாக ஐதீகம். மகரவிளக்கு பூஜைக்கு, ஒரு நாள் முன்னதாக, பந்தளம் அரண்மனையில் இருந்து, திரு ஆபரணம் பல்வேறு ஊர்களில் பவனியாக சன்னிதானம் வரும்.வருவாய்த் துறை ஆவணங்களில், இந்த பாதை, பந்தளம் தார என, குறிப்பிடப்பட்டது. நாளடைவில், திரு ஆபரண பாதை என மாற்றப்பட்டது.ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இந்த பவனி செல்வதால், ஆக்கிரமிப்பாளர்கள் இந்த பாதையை ஆக்கிரமித்துள்ளனர். தற்போது, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பிற மாநில பக்தர்களும், ஆலப்புழா, பத்தணந்திட்டா, கோட்டயம் மாவட்ட பக்தர்களும் பந்தளம் வருகின்றனர். இவர்களை, திரு ஆபரண பாதை வழியாக, சபரிமலை வர செய்தால், ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படும் என, கருத்து நிலவுகிறது.