மூன்று ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த கோவில்: பெண்கள் பூட்டை உடைத்து திறந்ததால் பரபரப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2016 12:12
புதுச்சேரி: இருதரப்பு மோதல் பிரச்னையால், மூன்று ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த கோவில் பூட்டை உடைத்து அப்பகுதி பெண்கள் பூஜை செய்தனர். புதுச்சேரி லாஸ்பேட்டை செயின்ட் பால்பேட் பகுதியில் ஏழை முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைப்பது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினருக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. ஒரு தரப்பினர் கோவிலை புனரமைத்து, 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடத்தினர். கும்பாபிஷேகத்தில் முறைகேடு நடந்ததாக கூறி, எதிர்தரப்பு புகார் எழுப்பியதால், தகராறு ஏற்பட்டது. இதனால் 3 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவிலை இரு தரப்பினரும் சேர்ந்து பூட்டு போட்டு பூட்டினர். கடந்த 3 ஆண்டுகளாக கோவிலில் பூஜைகள், திருவிழா நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், சில மாதங்களாக செயின்ட் பால்பேட் பகுதியில் தொடர்ச்சியாக இறப்பு சம்பவங்கள் நடந்தது. கோவில் பூட்டி கிடப்பதால்தான் இதுபோன்ற துக்க சம்பவங்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் கருதினர். இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கோவிலை திறக்க முடிவு செய்தனர். நேற்று காலை பெண்கள், பூட்டை உடைத்து கோவிலை திறந்தனர். கோவில் வளாகத்தை சுத்தம் செய்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், இருதரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல் தலைமையில் இருதரப்பினர் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.