கெட்டுப்போன உணவை, கவனக்குறைவாக வைத்து விட்டால், வைத்தவரை திட்டுவோம். ஆனால், தனக்கு விஷஉணவு தந்த பெண்ணையும் மன்னிக்கும் பெருந்தன்மை கொண்ட பெருந்தகையாகத் திகழ்ந்தார் நபிகள் நாயகம். “உருவமற்ற இறைவன் ஒருவன் தான். அவனுக்கு தேவை எதுவுமில்லை. அவன் யாரையும் பெறவும் இல்லை, யாராலும் பெறப்படவும் இல்லை. அவனுக்கு இணையாக யாருமில்லை,” என்ற கொள்கையை போதித்தார் நபிகள் நாயகம். இந்தக் கொள்கை உருவ வழிபாட்டில் ஆர்வம் கொண்டிருந்த யூதப்பெண் ஒருத்திக்குப் பிடிக்கவில்லை. அவள் நாயகத்திற்கு விஷம் கலந்த ஆட்டிறைச்சியைக் கொடுத்து கொல்ல முயன்றாள். அதில் விஷம் கலந்துள்ளது தெரிந்தும் கூட, நாயகம் அவளது திருப்திக்காக சிறிது சாப்பிட்டார். அதனால் ஏற்பட்ட துன்பத்தையும் சகித்துக் கொண்டார். நாயகத்தின் நண்பர்கள் இதையறிந்து அப்பெண்ணைக் கொல்ல முயன்றனர். நாயகம் அவர்களைத் தடுத்து விட்டார். அவளை மன்னித்து விட்டதாக அவர் கூறினார். நாமும், பெருந்தன்மையான உள்ளத்தைப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.