*துன்பம் கண்டு யாரும் வருந்தத் தேவையில்லை. துன்பத்திற்கு பின் நன்மை வரப் போவது உறுதி. இதை அறிந்து நடந்தால் சிரமமில்லாமல் வாழலாம். *கடவுள் மகத்தானவர் என்பதால் தான் மனிதர்களின் புகழ் மொழிக்கும், ஏளனத்துக்கும் செவி சாய்க்காமல் எப்போதும் மவுனமாகவே இருக்கிறார். *ஆட்சி பீடத்தில் வீற்றிருக்கும் திறமையற்ற அரசனைக் காட்டிலும், திறமையும், நேர்மையும் மிக்க தொழிலாளியாக இருப்பது உயர்வானது. *அறிவின் வடிவாகத் திகழும் கடவுள், பிரம்மாண்டமானவராக விளங்குகிறார். அவரது அருளால் தான் எல்லாமே நடக்கிறது. *பகுத்தறிவுவாதி எதையும் பிரித்தறியவும், விபரங்களை வரையறுக்கவும் விரும்புகிறான். ஆனால் ஆன்மிகவாதி விஷயங்களை ஒன்றுபடுத்தி, மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றுகிறான். *கடவுளின் அன்பில் மனம் நெகிழ்ந்து உருகுங்கள். அவரது திருவிளையாடலைக் கண்டு உணர்ந்தவர்கள் வேறு எதையும் பெரிதாகக் கருதமாட்டார்கள். *நீங்கள் செய்வது மட்டுமே நியாயம் என்று வாதாடாதீர்கள். மற்றவர்களின் கருத்தையும் மதியுங்கள். அவர்களது செயல்களிலுள்ள நியாயத்தை உணருங்கள். *அறிவியலின் கண்டுபிடிப்புகளைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், விஞ்ஞானிகள் மனித ஆன்மாவைக் கண்டறியும் கருவியையும் கண்டுபிடிக்க முயற்சிக்கலாம். *கடவுள் மீதுமனிதன் கொண்டிருக்கும் மதிப்பீடு அர்த்தமற்றது. அவரது சக்தியைத் தீர்மானிக்கும் சக்தி நமக்கு இல்லை. மேலும் மனித விதிகளுக்கு அடங்கி நடக்க வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை. *உங்கள் சிந்தனைகள் இமயத்தின் சிகரத்தை விட, உயர்ந்ததாக அமையட்டும். கடலையும் விட ஆழ்ந்து பார்க்கும் திறம் கொண்டதாகவும் விளங்கட்டும். *கடவுள் முன் மனிதன் அற்பப்புழு போன்றவன். தனது திறமை மீது நம்பிக்கை வைத்து மனிதன் அகந்தை கொள்வது முட்டாள்தனமானது. *அன்பும், ஆற்றலும் இணைந்து விட்டால் உலகம் வளமாகி விடும். இவை இரண்டும் தனித்திருந்தால் எந்தச் செயலும் வெற்றி பெறாது. *தீயவர்களிடமும் நல்ல குணம் இருக்கிறது. ஒழுக்கசீலர்களிடமும் கெட்ட குணம் இருக்கிறது. இது உலக இயற்கை. இதில் வியப்படையவோ, திகைக்கவோ ஏதுமில்லை. *அன்புடன் நடந்து கொள்ளுங்கள். எல்லார் மீதும் இரக்கப்படுங்கள். நல்ல உணர்வுகளை வெளிப்படுத்தி மகிழுங்கள். ஆனால் பாசம் என்ற பெயரில் யாருக்கும் அடிமையாகி விடாதீர்கள். *ஒருவன் பனையளவு பாவம் செய்திருந்தாலும், சிறு தினையளவு நன்மை செய்திருந்தால், அவனைக் கடவுள் தன் அடியவரில் ஒருவராக ஏற்றுக் கொள்வார். *ஆத்திகம் என்பது கடவுளின் ஒரு பக்கத்தையும், நாத்திகம் அவரது மறுபக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. இரண்டுமே மனித அறிவை முழுமை அடையச் செய்யும் விஷயங்கள் தான். *கடவுளின் கண்களில் அற்பமானது என்று எதுவுமில்லை. அதுபோல மனிதனின் கண்களுக்கும் அற்பமானது என்று எதுவும் இருக்கக் கூடாது. எல்லாமே உலகில் உயர்ந்தவை தான். (மகான் )அரவிந்தர்