பதிவு செய்த நாள்
08
டிச
2016
11:12
அகரம்: பழமை வாய்ந்த அகரம் வைகுண்ட பெருமாள் கோவில் கோபுரத்தில் அதிகளவில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால், கோ புரத்தில் விரிசல் ஏற்பட்டு விழுந்து விடுமோ என, பக்தர்கள் பரிதவிக்கின்றனர். அதை சீரமைக்க அறநிலைய துறை அதிகாரிகள் முன்வரவேண்டும் எனவும், கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியம், மானாம்பதி ஊராட்சி, அகரம் கிராமத்தில் பழமை வாய்ந்த வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. அறநிலை யத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், 10 ஆண்டுகளுக்கு முன், 25 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்று, நாள்தோறும் நித்ய பூஜைகள் நடத்தப்படுகின்றன. ஆனால், பராமரிப்பின்றி இந்த கோவிலை நிர்வகிப்பதால், கோபுரத்தில் செடி, கொடிகள் முளைத்துள்ளன.
கோவில் கோபுரத்தின் மீதும், மண்டபத்தின் மீதும் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. இதே நிலை நீடித்தால், கோபுரத்தில் விரிசல் விழும் நிலை ஏற்படும். இப்பழமை வாய்ந்த வைகுண்ட பெருமாள் கோவிலை அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை செய்து, கோவிலை பாதுகாக்க வேண்டும்.