பதிவு செய்த நாள்
08
டிச
2016
05:12
துர்கை வழிபாடு பாரதத்தின் ஆசேது ஹிமாசல பர்யந்தம் (ராமேஸ்வரத்திலிருந்து இமயம் வரை) நடந்து கொண்டிருக்கிறது. தென்கோடியில் கன்யாகுமாரியாக நித்தம் தவம் செய்பவள் காஷ்மீரத்தில் வைஷ்ணவியாக அருள்பாலிக்கிறாள். வங்காளத்தில் காளி வழிபாடு உலகப் பிரசித்தம் என்றால், மேற்கே குஜராத்திலும் நவராத்திரி பிரசித்தம். இப்படியாகக் கலியுகத்தில் பலவிதமான கஷ்டங்கள், துக்கம், நோய், அஞ்ஞானங்களை நீக்கும் அணுக்ரஹ சக்தி துர்கை. துர்கையை உபாசனை செய்வதில் நாடு முழுவதும் ஒன்றானாலும், அவள் யார் என்பதில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் அவளே ஆதிசக்தி; அவளிடமிருந்து தோன்றியவர்களே மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் என்பர். இன்னும் சிலர் முக்கண்ணன் தேவி பார்வதியே துர்கை என்றால், வேறு சிலர் அவள் விஷ்ணு மாயைõகிய லக்ஷ்மிதேவி என்பர்.
பார்வதி சிவனை மணாளனாக அடைய வேண்டி துர்கையான தேவியை ஆராதித்துத் தானும் துர்கையின் உருவத்தைப் பெறுகிறாள். பார்வதியின் வேண்டுகோளின்படி விஷ்ணு சிவனிடம் பார்வதியை மணந்துகொள்ளும்படி கேட்கிறார். சிவன் தன்னுடைய தவத்துக்குத் திருமணம் இடைஞ்சலாகும் என்று சொல்லி ஹிமாலயத்துக்குப் போய்விடுகிறார். விஷ்ணு பார்வதியைக் காலம் கனியும் வரை காத்திருக்கச் சொல்கிறார். அதன்படியே பார்வதி கரிய உருவில் விஷ்ணு லோகத்தில் இருந்து கொண்டு இன்னொரு உருவில் தானும் இமயத்தில் தவம் செய்கிறாள். சிவன்-பார்வதி திருமணம் நடக்கிறது. ஒருநாள் இருவரும் ஏகாந்தமாக இருக்கையில் விஷ்ணு தன்னிடம் இருந்த கரிய நிற துர்கை ரூபத்தைப் பார்வதியிடம் அனுப்புகிறார். பார்வதியின் நிறம் கருப்பாகி விடுகிறது. இதனால் சிவன் அதிருப்தியடைகிறார். பார்வதி காத்யாயினி ரூபியான லக்ஷ்மியைத் துதித்து, அவள் அனுக்ரஹத்தால் கவுரி (வெண்மை நிறமுள்ளவள்) ஆகிறாள். மஹிஷாசுரன் வதையின்போது துர்கை ரூபியான லக்ஷ்மியுடன் பார்வதியும் சேர்ந்துகொள்கிறாள். (மார்கண்டேய புராணம், பத்ம புராணம்). இவ்வாறு அரியும் சிவனும் ஒன்று என்பதுபோல் தேவியர்களும் ஒன்று என்பது தெரிகிறது.
நவராத்திரி துர்கா ரூபியான லக்ஷ்மியின் உத்ஸவம். அதனால்தான் திருப்பதியில் பிரம்மோத்ஸவம் கொண்டாடுகிறார்கள். துர்கை ஆஸ்வீஜ மாதம் சுக்ல பக்ஷ பிரதமையிலிருந்து அஷ்டமி வரை யுத்தம் செய்து மஹிஷாசுரன், சும்பன், நிசும்பன், சண்டன், முண்டன், தூம்ரன், ரக்தபீஜன் முதலான அசுரர்களை வதைத்து தேவர்களுக்கு அனுக்ரஹித்தாள். நவமியன்று தேவர்கள் அவளுடைய ஆயுதங்களைச் சுத்தம் செய்து பூஜை செய்தனர். அதனால்தான் நவமியன்று ஆயுத பூஜை செய்கிறோம். தசமியன்று விஜயோத்ஸவம் (வெற்றி விழா) கொண்டாடினர். இவ்வாறு தேவதைகள் வழிபட்டபடியே நாமும் நவராத்திரியில் தேவியின் ஒவ்வொரு ரூபத்தையும் வழிபட்டால் நமக்கு ஆரோக்கியம், சவுந்தர்யம், வலிமை, தேஜஸ் ஆகியவற்றுடன் ஐஸ்வர்யம், ஸத்ரு, நாஸம், ரக்ஷணை (பாதுகாப்பு) போன்ற இம்மைக்குரிய பலன்களையும் அருள்வாள். ஸா யாசிதா ச விக்ஞானம் துஷ்டா ருத்திம் ப்ரயச்சதி என்றபடி துர்கையிடம் ஞானத்தை வேண்டினால் சதா அபிவிருத்தியையும் அளிப்பாள். நவராத்திரியில் தேவியை மனதார வழிபட்டு அவள் கிருபைக்குப் பாத்திரராவோம்!