பதிவு செய்த நாள்
09
டிச
2016
10:12
பெரம்பலுார் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், 85 ஆண்டுகளுக்கு பின், பிப்., 2ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அரியலுார் மாவட்டம், கங்கை கொண்டசோழபுரத்திலுள்ள பிரகதீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முன், ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திரசோழனால், கட்டப்பட்டது. அவர், கங்கை நதி வரை போராடி வெற்றி பெற்றதன் சின்னமாக கருதப்படுகிறது. உலக பிரசித்தி பெற்ற இக்கோவில், உலக புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. இக்கோவிலின் கலைசிற்பங்களை கண்டுகளிக்க, இந்தியா மட்டுமல்லாது பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா, உள்ளிட்ட பல நாட்டு மக்கள் வந்து பார்த்து வியந்துள்ளனர்.இக்கோவிலில் உள்ள சிங்கமுக கிணறு, ஒரே கல்லில் ஆன நவகிரகங்கள், மகிஷாசுரமர்த்தினி துர்க்கை அம்மன் கோவில், 20 அடி உயர நந்தி பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் உள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் உடையதாகும். இக்கோவிலில், கடைசியாக, 1932ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது, 85 ஆண்டுக்கு பின், வரும், 2017 பிப்., 2ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலைய துறை மற்றும் தொல்லியல் துறை அனுமதியுடன், காஞ்சி அன்னாபிஷேக கமிட்டியினர் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை, கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம் உட்பட, ஐந்து வகையான ஹோமங்கள் நடைபெற்றன. நேற்று காலை, 9:30 மணிக்கு, மகாதீபாராதனை, மற்றும் பாலாலயம், முகூர்த்த கால் நடுதல் நடைபெற்றது.